மெயின் பிக்சரே இனிமேல் தான்...பீகாரில் பிரதமர் மோடி உற்சாகம்

10 ஆண்டுகளில் செய்தது வெறும் ட்ரெய்லர் தான். மெயின் பிக்சர் இனிமேல் தான் இருக்கு என பிஹாரில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார்.

Update: 2024-04-06 05:06 GMT

“கடந்த 10 ஆண்டுகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செய்த செயல்கள் வெறும் ட்ரெய்லர் தான். அதிக விஷயங்கள் இனிதான் நடக்க இருக்கின்றன” என பிரதமர் மோடி பேசினார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, பிஹாரில் முதன் முறையாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள ஜமுய் நகருக்கு வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, "பாஜகவுக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் ஆதரவாக இங்கு எழுப்பப்படும் கோஷம் இங்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. நமது அரசு கடந்த 10 ஆண்டுகளில் செய்த செயல்கள் அனைத்தும் ட்ரெய்லர் தான். அதிக விஷயங்கள் இனிதான் நடக்க இருக்கின்றன. நாம் அனைவரும் இணைந்து நாட்டை முன்னேற்றுவோம்.

தற்போது நாம் யார் என்பதை உலகிற்கு காட்டி உள்ளோம். இப்போது ஒட்டுமொத்த உலகமும் நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன. உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக நாம் உயர்ந்திருக்கிறோம். எனது தலைமையிலான அரசு கர்ப்பூரி தாக்கூருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா விருதை வழங்கியது.

வரக்கூடிய மக்களவைத் தேர்தலின்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும். அதற்கு, பிஹாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற வேண்டும்" என்று பிரதமர் மோடி பேசினார்

Tags:    

Similar News