அரபிக் கடலில் உருவானது 'பிபோர்ஜோய்' புயல்

கேரளா முதல் மராட்டியம் வரையிலான நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2023-06-07 01:32 GMT

அரபிக்கடலில் உருவானது பிபோர்ஜோய் புயல். (கோப்பு படம்)

மும்பையில் இருந்து தென்மேற்கே 1,100 கிமீ தொலைவில், தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்து இருந்தது.

இந்தநிலையில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. இந்த சூறாவளிக்கு 'பிபோர்ஜோய்' என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வங்கதேசம் வழங்கியுள்ள 'பிபோர்ஜோய்' என்ற பெயருக்கு ஆபத்து என்பது பொருளாகும். மேலும் இந்த புயலால் கேரளா முதல் மகாராஷ்டிரா வரையிலான நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை தீவிரமடையும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். இதனால் இன்னும் ஓரிரு நாளில் கேரளாவில் பலத்த மழை தொடங்கும். தென்மேற்கு பருவமழையாக இது இருக்கும்.இந்த புயல் மூலம் தமிழகத்திலும் ஓரளவு மழைப்பொழிவு இருக்கும்.

குறிப்பாக கேரளாவில் பெய்யும் மழை மூலம் முல்லைப்பெரியாறு அணையில் அதிக மழை கிடைத்து நீர் மட்டம் உயரும் வாய்ப்புகள் உள்ளது.

Similar News