ரூ.48 ஆயிரத்து 262 கோடி யாருடையது?

Unclaimed Money- இந்தியா முழுவதும் வங்கிகளில் ரூ.48,262 கோடி உரிமைக்கோரப்படாமல் இருக்கிறது.

Update: 2022-08-01 01:45 GMT

பைல் படம்.

Unclaimed Money- வங்கிகளில் டெபாசிட் முதிர்வு தொகை மற்றும் வங்கிக் கணக்கில் இருக்கும் தொகையை 10 ஆண்டுகளுக்கு மேல் எடுக்காமல் இருந்தால் அவற்றை உரிமைக் கோரப்படாத பணமாக வகைப்படுத்துவர். அந்த வகையில் கடந்த 2021 - 22 நிதியாண்டில் ரூ.48,262 கோடி பணம் இந்திய வங்கிகளில் உரிமைக் கோரப்படாமல் உள்ளது.

இத்தொகையில் பெரும்பான்மையான பணம் 8 மாநிலங்களில் இருந்து டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அவை தமிழகம், பஞ்சாப், குஜராத், மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம், கர்நாடகா, பீகார் மற்றும் தெலுங்கானா/ஆந்திரா மாநிலங்கள் ஆகும்.

ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, 10 ஆண்டுகளாக செயல்படாத சேமிப்பு மற்றும் நடப்பு கணக்குகளில் இருக்கும் தொகை, முதிர்வடைந்த டெபாசிட்கள் ஆகிய தொகையை டெபாசிட்டர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு மாற்றுவர்.

இருப்பினும் பின்னாட்களில் டெபாசிட் செய்தவர்கள் தங்கள் பணத்தை வட்டியுடன் பெற உரிமை உண்டு. வங்கி டெபாசிட்கள் குறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்காமல் விடுவது, பல்வேறு வைப்புத் தொகை இருக்கும் போது ஒன்றை மறந்து விடுவது, வயது முதிர்ந்த தம்பதியில் டெபாசிட் செய்தவர் இறந்து விட்டால் அவரது துணைக்கு எப்படி பணத்தை பெறுவது என வழிமுறை தெரியாமல் போவது போன்ற காரணங்களால் இந்த உரிமைக்கோராத தொகை அதிகரித்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2020 - 21 நிதியாண்டில் இந்த தொகை 39,264 கோடியாக இருந்தது. 2021 - 22ல் சுமார் ரூ.9 ஆயிரம் கோடி அதிகரித்துள்ளது. இந்நிலையில் அதிக உரிமைக்கோரப்படாத தொகை உள்ள தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் விழிப்புணர்வை முன்னெடுக்க ஆர்பிஐ முடிவு செய்துள்ளது. எட்டு மாநிலங்களின் மொழிகளிலும் மற்றும் ஹிந்தி, ஆங்கிலத்திலும் இந்த விழிப்புணர்வு பிரசாரம் இருக்கும். இதன் மூலம் பலர் டெபாசிட்களை பெறுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News