வேலை நிறுத்தத்திற்கு ரெடியாகும் ரயில்வே ஊழியர்கள்?

நாடு முழுவதும் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ரெடியாகி வருகின்றனர்

Update: 2023-11-07 01:30 GMT

பைல் படம்

கடந்த 1974ஆம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். சுமார் 20 நாட்கள் நீடித்த அந்த வேலைநிறுத்தம் ஒட்டுமொத்தமாக நாட்டின் போக்குவரத்தையும் முடக்கிப் போட்டது.

இதற்கிடையே மீண்டும் அதேபோன்ற ஒரு மோசமான நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ரயில்வே ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட ரெடியாகி வருகிறார்கள்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்வது குறித்து முடிவெடுக்க 12 லட்சம் இந்திய ரயில்வே ஊழியர்களுக்கு இடையே ரகசிய வாக்கெடுப்பு நடக்க உள்ளது. வரும் நவம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தொழிற்சங்கங்கள் இந்த ரகசிய வாக்கெடுப்பை நடத்துகிறது. அதில் கிடைக்கும் முடிவை அடிப்படையில் வைத்து வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதில் நாடு முழுக்க இருக்கும் ஆயுதத் தொழிற்சாலைகள் உட்பட பல்வேறு பாதுகாப்பு நிறுவனங்களில் பணிபுரியும் 3.9 லட்சம் சிவில் தொழிலாளர்களும் பங்கேற்பார்கள் என்றே தெரிகிறது. பழைய ஓய்வூதியத்தை வலியுறுத்தி நடத்தப்படும் இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் தொழிற்சங்கமான பிஎம்எஸ், அதாவது பாரதிய மஸ்தூர் சங்கமும் ஆதரவு கொண்டுள்ளது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்த பிஎம்எஸ் அமைப்பும் நவம்பர் 22ஆம் தேதி தனியாகப் பேரணியை நடத்துகிறது. ரகசிய வாக்கெடுப்பு குறித்து தனது நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவிக்க மறுக்கும் பிஎம்எஸ், அதற்கு தங்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என்றும் பழைய ஓய்வூதிய திட்டத்தைத் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று மட்டும் கூறுகிறது.

மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 60 தொழிற்சங்கங்கள் இணைந்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை வலியுறுத்தி JFROPS என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. ரயில்வே மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் Industrial Disputes Act கீழ் வருவதால் வேலைநிறுத்த போராட்டம் குறித்து வாக்கெடுப்பை நடத்துவது கட்டாயமாகும். இந்த 75% உறுப்பினர்கள் கலந்து கொண்டால் மட்டுமே வாக்கெடுப்பே செல்லுபடியாகும்.

அது மட்டுமின்றி 3இல் 2 பங்கு வாக்குகள் அதற்கு ஆதரவாகப் பதிவானால் மட்டுமே வேலைநிறுத்த போராட்டத்தை அறிவிக்க முடியும். பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி நடத்தப்பட்டும் இந்தப் போராட்டத்திற்கு மிகப் பெரிய ஆதரவு இருக்கிறது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இதற்கான ஆதரவு அதிகமாக இருக்கிறதாம். இதனால் இந்த வாக்கெடுப்பு ரொம்பவே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கை இது என்று கூறும் அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் சம்மேளனம், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் நிச்சயம் அனைவரும் ஆதரவு தருவார்கள் என்று தெரிவித்துள்ளார். இந்த வாக்கெடுப்பு வெற்றி பெறும்பட்சத்தில், லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக வரும் பிப்ரவரி மாதம் வேலைநிறுத்தத்தை ஆரம்பிப்பது குறித்து தொழிற்சங்கங்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.

1974க்கு பிறகு ரயில்வே துறையில் வேலை நிறுத்தத்தை வலியுறுத்தி இதுவரை மூன்று முறை ரகசிய வாக்கெடுப்புகள் நடந்துள்ளன.. ஆனால், அந்த மூன்று முறையும் பேச்சுவார்த்தை மூலம் போராட்டங்கள் தவிர்க்கப்பட்டன. இந்த முறை ரயில்வே ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மட்டுமே தங்கள் ஒரே கோரிக்கையாக வைக்கிறார்கள். அதை அமல்படுத்தும் வரை போராட்டத்தை வாபஸ் பெற போவதில்லை என்பதே அவர்கள் கோரிக்கையாக உள்ளது.

கடந்த 1974இல் நடந்த ரயில்வே ஊழியர்கள் போராட்டம் சுமார் 20 நாட்கள் நீட்டித்த நிலையில், அப்போது ஒட்டுமொத்தமாக நாட்டின் போக்குவரத்தை முடங்கிப் போனது. இப்போது மீண்டும் அதேபோன்ற ஒரு நிலை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

Tags:    

Similar News