பா.ஜ.க.பற்றிய யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த குலாம்நபி ஆசாத்

BJP News Today - தனி கட்சி தொடங்குவேன் என கூறியதன் மூலம் பா.ஜ.க. பற்றிய யூகங்களுக்கு குலாம்நபி ஆசாத் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Update: 2022-08-30 05:36 GMT

குலாம் நபி ஆசாத்

BJP News Today -காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். வெறுமனே விலகாமல் தனது ராஜினாமா கடிதத்தில் கட்சித் தலைமை குறித்து தீவிரமான புகார்களை முன் வைத்திருக்கிறார். குறிப்பாக ராகுல் காந்தி குறித்து.

'ராகுல் காந்தி தான்தோன்றித்தனமாக முடிவுகள் எடுக்கிறார், முக்கிய முடிவுகளை அவரோ, அவர் உதவியாளர்களோ அல்லது பாதுகாவலர்களோதான் எடுக்கிறார்கள். கட்சியில் வேறு யாரையும் கலந்து ஆலோசிப்பதே இல்லை.

சோனியா காந்தி வெறும் அலங்காரத் தலைமையாக மட்டுமே திகழ்கிறார். நிறைய விஷயங்கள் ரிமோட் கண்ட்ரோல் செய்யப்படுகிறது. இப்படி நடந்து கொண்டுதான் யூ.பி.ஏ.வை அழித்தோம். அது தொடர்ந்து நிகழ்கிறது.'

என்றெல்லாம் அவரது கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இதனை காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்து இருக்கின்றனர். கட்சியில் 'பாரத் ஜோடோ யாத்திரை' (பாரத ஒற்றுமை யாத்திரை) என்று அறிவித்து அதற்கான தயாரிப்புகளில் மும்முரமாக இருக்கும் போது இப்படி ஒரு சீனியர் தலைவர் சொல்வது அந்தப் போராட்டத்தை பாதிக்கும் என்று விமர்சிக்கிறார்கள்.

இவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கடைசி நாளில் இவர் வழியனுப்பு உரையில் பிரதமர் மோடி கண்ணீர் விட்டு நெகிழ்ந்து பேசினார். பின்னர் பத்ம விபூஷன் விருதெல்லாம் கொடுத்தார்கள். தில்லியில் அவருக்கு கொடுத்திருந்த அரசு இல்லத்தில் தொடர்ந்து தங்க அனுமதியும் மத்திய அரசு கொடுத்தது. இதெல்லாம் அவர் பா.ஜ.க.வை நெருங்குகிறார் என்பதையே காட்டுகிறது என்றெல்லாம் கூறினார்கள். ஆனால் குலாம் நபி ஆசாத்தோ காஷ்மீர் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தனி கட்சி தொடங்க போகிறேன் என தெளிவாக கூறி யூகங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

நேரு குடும்பம் குறித்து ஆசாத் வைத்த புகார்கள் சீரியசானவை. ராகுல் காந்தியின் தலைமைப் பண்பின் போதாமை இத்தனை தோல்விகளைக் கொண்டு வந்த ஒருவரை வேறு எந்தக் கட்சியிலும் தலைவராக தொடர விட மாட்டார்கள். அரசியல் கட்சி கூட வேண்டாம். ஒரு சின்ன தனியார் கம்பெனியில் கூட எந்த சிறு வெற்றியும் காட்ட இயலாத ஒருவரை மேனேஜராக தொடர விட மாட்டார்கள். சீட்டைக் கிழித்து வீட்டுக்கு அனுப்புவார்கள்.

ஆனால் ராகுலுக்கும் அந்தத் தோல்விகளுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல கட்சியினர் நடந்து கொண்டு வருவது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். அதுவும் தனது சொந்தத் தொகுதி, அதுவும் பரம்பரை தொகுதியிலேயே தோற்பதும் அதற்குப் பிறகும் கட்சியினர் எந்த சலனமும் இன்றி அவர் தலைமையையே நாடுவதும் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

பா.ஜ.க.வின் தொடர் வெற்றிகளுக்கும் வலிமைக்கும் மோடியின் வசீகரமும் அமித் ஷாவின் ஒருங்கிணைப்புத் திறனும் மட்டுமே காரணம் அல்ல. ராகுல் காந்தி எனும் அதி பலவீனத் தலைவர் எதிர்க் கட்சியில் இருப்பதும் காரணம். ஆசாத்தின் ராஜினாமாவை சுட்டிக் காட்டி பேசிய பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் 'பாரத் ஜோடோ யாத்திரையை' நிறுத்தி விட்டு 'பரிவார் சோடோ' யாத்திரையை காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டும் என்று கிண்டல் அடித்திருக்கிறார். 'பரிவார் சோடோ' என்றால் குடும்பத்தை விட்டு நீங்கு என்று அர்த்தம்.

ராகுல் நல்லவராகவே, மனதளவில் தேச முன்னேற்றத்தை விரும்புகிறவராகவே கூட இருக்கக் கூடும். ஆனால் அவரால் பா.ஜ.க.வை வீழ்த்த இயலாது. வாரிசு அரசியல் எனும் பா.ஜ.க.வின் பிரச்சாரத்தையும் முறியடிக்க முடியாது. எனவே, நேரு குடும்பத்தின் கொல்லைப் புறத்தில் உட்கார்ந்து இருக்கும் வரை காங்கிரஸுக்கு விடிவு காலம் வரும் சாத்தியம் மிகவும் குறைவு.

ராகுல் தலைவராக முன்னிலைப்படுத்தப்படும் வரை, அந்தக் குடும்பத்தின் ஆதிக்கம் இருக்கும் வரை பா.ஜ.க. தொடர்ந்து வலிமை பெறுவதை தவிர்க்க இயலாது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News