பெட்ரோல் விலையை விஞ்சிய தக்காளி..! தவிப்பில் மக்கள்..!

நாட்டில் விலைவாசி உயர்வு பெட்ரோல்,டீசல் விலையை வைத்து கணிப்பது வழக்கம்.ஆனால் இப்போது பெட்ரோல் விலையையே விஞ்சி தக்காளி உயரப் பறக்கிறது..!

Update: 2023-07-05 07:33 GMT

தக்காளி விலை உயர்வை குறிப்பிடும் மாதிரி படம்.

பெட்ரோல் விலையை விஞ்சி தக்காளி ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவது சாதாரண மக்களின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினத்தில் தக்காளி கிலோவுக்கு ரூ.160க்கு விற்பனையாகிறது. மற்ற நகரங்களில் தக்காளி விலையை பாருங்கள்.

நாட்டில் தக்காளி விலை உயர்வு எதிரொலியாக எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், இந்த விலை உயர்வு ஒரு பருவகாலத்தில் ஏற்படும்  உயர்வுதான், இன்னும் 15 நாட்களில் விலை குறையும் என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 

இந்தியாவில் தக்காளி விலை:

நாட்டில்  சாதாரண குடிமக்களின் பாக்கெட் காலியாகும் அளவுக்கு தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்துவருகிறது. சில நகரங்களில் காய்கறி விலை கிலோ ரூ.150ஐ தாண்டியுள்ளது. தக்காளி விலை உயர்வு பருவகாலத்தில் ஏற்படும் நிகழ்வு என்றும் இன்னும் 15 நாட்களில் விலை குறையும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

விசாகப்பட்டினத்தில் தக்காளி கிலோ ரூ.160க்கு விற்கப்படுவதாக பல செய்தி நிறுவனங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

பல்வேறு நகரங்களில் தக்காளி விலை பட்டியல் தரப்பட்டுள்ளது.

தக்காளி விலை (ரூ/கிலோ)

சென்னை ரூ. 140, (ரூ 60 நியாய விலைக் கடைகள் மூலம்)

சிலிகுரி ரூ. 155

மொரதாபாத் (உபி) ரூ. 150

டெல்லி ரூ. 110

கொல்கத்தா ரூ. 148

மும்பை ரூ. 58

“காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தக்காளி கிலோ 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விலைவாசி உயர்வால் வாடிக்கையாளர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அரசு தலையிட்டு காய்கறி விலையை முறைப்படுத்த வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கூறி வருகின்றனர்.

“தக்காளி விலை நாடு முழுவதும் எல்லா இடங்களிலும் அதிகரித்துவிட்டது. தற்போது தக்காளியை விட பெட்ரோல் விலை குறைவு. தக்காளி விலை உயர்வால் இப்போது எங்கள் செலவுகளை நிர்வகிப்பது எங்களுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது" என்று ஒரு குடும்பத்த தலைவி கூறியுள்ளார்.

நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் தரவுகளின்படி, சராசரியாக அகில இந்திய சில்லறை விற்பனை விலை ஒரு கிலோவுக்கு ரூ.83.29 ஆக இருந்தது.

தமிழகத்தில் நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனை

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு, சென்னையில் உள்ள 82 நியாய விலைக்கடைகள் மூலம் தக்காளி விற்பனையை தொடங்கியுள்ளது. அங்கு தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால், மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் இம் முயற்சி விரிவுபடுத்தப்படும் என்றும் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

விலைவாசியைக் கட்டுப்படுத்த மேற்குவங்கம் நடவடிக்கை

மேற்கு வங்கத்தில் தக்காளி விலை உயர்ந்து வரும் நிலையில், மம்தா பானர்ஜி அரசு விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. நகரத்தில் நியாயமான விலையில் காய்கறிகளை விநியோகிக்க அரசாங்கம் அதன் சில்லறை நெட்வொர்க்கான சுஃபல் பங்களாவுக்கு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த செய்திகளின்படி சுஃபல் பங்களா ஒரு கிலோ தக்காளி ரூ.115க்கு விற்பனை செய்கிறது.

கொசுறு செய்தி :

பல குடும்பங்களில் தக்காளி இல்லாமல் சாம்பார் அல்லது உணவுப்பொருட்களை தயாரிக்கத் தொடங்கிவிட்டனர். சில மீடியாக்கள் இன்னும் ஒருபடி மேலே போய் "தக்காளி இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி?" என்று புத்தகம் போடாத குறையை நீக்க செய்திகள் வெளியிட்டு வருகிறார்கள். சமூக வலை தளங்களில் தக்காளியை வைத்து மீம்ஸ்களும் பஞ்சமில்லாமல் வைரலாகி வருகின்றன. 

Tags:    

Similar News