பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்த்து : மத்திய அரசு கை விரிப்பு..!

பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வாய்ப்பில்லை என மத்திய அரசு திட்ட வட்டமாக அறிவித்துள்ளது.

Update: 2024-07-23 10:10 GMT

பிரதமர் மோடி மற்றும் பிஹார் முதலமைச்சர் நிதிஷ்குமார் 

பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும். இதற்காகவே மோடி அரசுக்கு ஆதரவு தருகிறோம் என முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்திருந்தார். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு, பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கு பெரும் அடியாகப் பார்க்கப்படுகிறது.

பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சி நீண்ட காலமாக கோரி வருகிறது. நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்னதாக நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் அக்கட்சி தனது கோரிக்கையை வலியுறுத்தியது. இந்நிலையில், மத்திய அமைச்சர்கள் குழு அறிக்கை 2012-ன் படி பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என்று நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மத்திய அரசின் முடிவால் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்குவேன் என்று வாக்குறுதி கொடுத்ததால் தான், நான் நம்பி ஆதரவு கொடுத்தேன் என நிதிஷ்குமார் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் மத்திய அரசு ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்குவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என தெரிகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் இந்த பிரச்னை முக்கியமான விஷயமாக கவனிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News