இந்தியா- சீனா எல்லை பதட்டத்தால் மூலிகை கடத்தல் பெருமளவு குறைந்தது

இந்திய- சீன எல்லை பதட்டத்தால், இந்திய வனங்களில் நடைபெறும் மூலிகை கடத்தல் குறைந்துள்ளது - வனத்துறை நிம்மதி

Update: 2021-10-24 02:49 GMT

இந்தியா- சீனா இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் நீடித்து வரும் எல்லை பதட்டத்தால் இந்திய வனவளம் பாதுகாக்கப்பட்டுள்ளது. தவிர மூலிகை கடத்தல் பெருமளவு குறைந்துள்ளது என வனத்துறை நிம்மதி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் வனவளம் மிகவும் அதிகம். தவிர வனங்களில் மூலிகை வளம் ரொம்பவே அதிகமாக உள்ளது. ஊடகங்கள், டிஜிட்டல் மீடியாக்கள், விஷூவல் மீடியாக்கள் என அத்தனை சமூக தொடர்பு சாதனங்களும், வனப்பாதுகாப்பு, வனவிலங்குகள் பாதுகாப்பு பற்றி அதிகம் பேசுகின்றன. ஆனால் உலகில் மிகவும் வளமான இந்திய வனங்களில் இருந்து கடத்தப்படும் மூலிகைகள் பற்றி இதுவரை யாருக்கும் தெரியவில்லை. மூலிகை கடத்தல் தான் இன்றைய நிலையில் தங்கத்தை விட விலை மதிக்க முடியாத கடத்தல் பொருளாக மாறி உள்ளது. காரணம் மருந்து பொருட்களை கொண்டு செல்வது எளிது. கொண்டு செல்ல தடையும் இல்லை. மூலிகை கடத்தல் மூலம் கடத்தல் கும்பலுக்கு ஆண்டு தோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் சட்டவிரோதமாக வருவாய் கிடைத்து வந்தது.

இந்திய வனங்களில் கிடைக்கும் மூலிகைகளில் பல ஆயிரம் ரகங்களின் விலையை கேட்டாலே தலை சுற்றி விடும். ஆமாம் ஒரு கிலோ மூலிகை 80 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்கப்படும். இந்திய மூலிகைகளை இந்திய கம்பெனிகள் மட்டுமின்றி, சீனா தான் அதிகளவில் கொள்முதல் செய்து வந்தது. இந்த கொள்முதலை வெளிப்படையாக அரசு மூலம் செய்யாமல், கடத்தல்காரர்கள் மூலம் பெற்று வந்தது. கிழக்கு இந்திய எல்லையில் உள்ள மாநிலங்களில் இந்த மூலிகை கடத்தல் மாபியாக்கள் அதிகம் உள்ளனர். இவர்கள், வனப்பகுதிகள் வழியாக ஊடுறுவி இந்திய எல்லையை கடந்து எளிதாக சீன எல்லைக்குள் புகுந்து மூலிகைகளை விற்று விட்டு பணத்துடன் திரும்பி விடுகின்றனர். இந்த கடத்தலை தடுப்பது வனத்துறைக்கு குதிரைகொம்பு போன்ற விஷயமாகவே இருந்து வந்தது.

காரணம், வனத்துறையில் போதிய பணியாளர்களும் இல்லை. போதிய தொழில்நுட்பங்களும் இல்லை. இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய சீன எல்லைகள் பதட்டமான நிலையில் இருந்து வருகின்றன. இரு நாட்டு ராணுவமும் எல்லைகளில் குவிக்கப்பட்டு பலத்த கண்காணிப்பு வளையத்திற்குள் எல்லைப்பகுதிகள் வந்துள்ளது. இதற்கு முன்னர் ராணுவ முகாம்கள் எல்லையில் இருந்தாலும், ராணுவமும் முகாமிற்குள் உள்ளது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக முழுமையான விழிப்பு நிலையில் உள்ளது. அதுவும் இந்தியாவில் கிழக்கு எல்லையில் 3500 கி.மீ., துாரமும் இந்திய ராணுவம் ரோந்து செல்வதோடு, வலுவான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி உள்ளது.

மேலும் எல்லை பிரச்னையில் சீனாவை இந்தியா நம்பவில்லை. எனவே எந்த நேரமும் இந்திய ராணுவம் இனி எல்லையில் விழிப்புணர்வு நிலையில் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் என இந்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இங்கு தான் கடத்தல் கும்பல்கள் சிக்கி கொண்டன. இந்திய ராணுவத்தை ஏமாற்றி வனத்திற்குள் சென்று மூலிகைகளை பறித்துக் கொண்டு எல்லை கடந்து சென்று சீனாவிற்குள் சப்ளை செய்வது சாத்தியமில்லாத வேலை. எனவே வனத்திற்குள் மூலிகைகளை பறித்து கடத்துவது பெருமளவு குறைந்து விட்டது. இந்திய ராணுவம் எடுத்து வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளால் இந்திய வனங்களுக்கு பெரும் பாதுகாப்பு கிடைத்துள்ளது என வனத்துறை நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது. வனத்துறைக்கு இருந்த பணிச்சுமையில் பெருமளவு பணிகளை இந்திய ராணுவம் குறைத்து விட்டது என வனத்துறை உயர் அதிகாரிகள் நிம்மதியுடன் கூறுகின்றனர். தமிழகத்தில் இந்திய வனங்களை பற்றியும், இந்திய வனமூலிகைகளை பற்றியும், அவற்றின் பயன்பாடுகளை பற்றியும் ஆய்வு செய்யும் அதிகாரிகள் அதிகளவில் உள்ளனர். இவர்கள் இதே நிலை தொடர்ந்தால் இந்திய வனங்கள் கிழக்கு எல்லையில் பெரும் செழிப்புடன் விளங்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். இதேபோல் நாடு முழுவதும் வனங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் இவர்கள் கூறி வருகின்றனர்.

Tags:    

Similar News