இந்தியாவில் கொடி கட்டிப்பறக்கும் உணவுத்துறை

இந்தியாவில் உணவுத்துறையின் வளர்ச்சி பிற துறைகளை விட இரு மடங்கு அதிக வேகத்தில் உள்ளது.

Update: 2024-05-26 06:03 GMT

பைல் படம்

உலக அளவில் வேகமாக வளரும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவின் ஆண்டு சராசரி வளர்ச்சி 7 சதவீதத்தை தாண்டி சாதனை படைத்து வருகிறது. மாதாந்திர ஜி.எஸ்.டி., வரிவசூல் மட்டும் இரண்டு லட்சம் கோடியை தாண்டி விட்டது. ஜி.எஸ்.டி., இன்னும் முழு அளவில் அமல்படுத்தப்பட்டால், இந்த வருவாய் இன்னும் இரு மடங்கு கூடும். அந்த அளவு நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது.

இந்த வளர்ச்சியில் உணவுத்துறை முதலிடத்தையும், கட்டுமானத்துறை இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் உணவுத்துறையின் வளர்ச்சி 15 சதவீதத்தை எட்டி உள்ளது. கட்டுமானத்துறையின் வளர்ச்சி 9 சதவீதமாக உள்ளது. இந்தியாவின் ஜனத்தொகையே இதற்கு முக்கிய காரணம். குறிப்பாக இந்தியாவில் வீடுகளில் சமைப்பது குறைய தொடங்கி உள்ளது. கடைகளில் ஆன்லைன் மூலமும், நேரடி பார்சல் மூலமும் உணவு வாங்கி சாப்பிடுவதை வழக்கமாக்கி வருகின்றனர். தவிர இந்தியர்கள் தற்போது வெளியிடங்களுக்கு செல்வதையும் அதிகரித்து வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட, தற்போது இந்தியர்களின் பயண சதவீதம் இருமடங்கு வரை அதிகரித்துள்ளது. இப்படி பயணிப்பவர்களும் கடைகளில் தான் சாப்பிட வேண்டி உள்ளது. இதனால் ஓட்டல்கள், பேக்கரிகள், டீக்கடைகள், சுவீட்ஸ்டால்களின் வளர்ச்சி கிடுகிடுவென அதிகரித்துள்ளது.

குறிப்பாக ஓட்டல்கள் தங்களை நோக்கி வரும் வாடிக்கையாளர்களை சமாளிக்க முடியாமல் தடுமாறி வருகின்றன. வாடிக்கையாளர்கள் எந்த ஓட்டல்களில் சுத்தமாக இருக்கும். பெருமளவு சுவை இல்லாவிட்டாலும், ஒரளவு சுவையும், சுத்தமும் வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளனர். இதற்காக ஓட்டல்களி்ல் சாப்பிட செல்லும் முன்னர் சம்மந்தப்பட்ட ஓட்டல் பற்றி விசாரித்து வருகின்றனர்.

இவர்கள் கேட்கும் தரத்தில் உணவு வழங்கும் ஓட்டல்களின் எண்ணிக்கை மிக, மிக குறைவாகவே உள்ளன. பெரும்பாலான ஓட்டல்களில் உணவின் தரமும், சுகாதாரமும் குறைவாக இருக்கிறது. இப்படிப்பட்ட ஓட்டல்களை வாடிக்கையாளர்களே தவிர்த்து விடுகின்றனர். அதே நேரம் நல்ல தரமான ஓட்டல்களில் கூட்டம் குவிகிறது. இந்த கூட்டத்தை சமாளிக்க முடியாமல் ஓட்டல்கள் திணறுகின்றன. காரணம் வரும் கூட்டத்திற்கு ஏற்ற வகையில் அதிகம் உணவுகளை தயாரிக்க தேவையான பணியாளர்களும் இல்லை. ஓட்டல்களின் உள்கட்டமைப்பும் போதவில்லை. இதனால் பல ஓட்டல்களில் காலை உணவு 10 மணிக்குள் தீர்ந்து விடுகிறது. மதியம் இரண்டு மணிக்கே தீர்ந்து விடுகிறது. இரவு 8 மணிக்கு மேல் பல ஓட்டல்களை மூடி விடுகின்றனர்.

கிராமப்பகுதிகளில் இருந்தே ஓட்டல்களில் பணிபுரிய பணியாளர்கள் அதிகம் வருகின்றனர். இவர்கள் வீடு திரும்ப வேண்டும். ஓட்டல்களை விரைவில் மூடுவதற்கு இதுவும் ஒரு காரணம். தவிர வியாபாரமும் அதிகரித்து, விற்பனையும் வேகமாக முடிந்து விடுகிறது. மீண்டும் அதே உணவு தயாரிக்க போதுமான நேரம் கிடைப்பதில்லை. இதனால் மூடி விடுகின்றனர். இந்த சூழலை பயன்படுத்தி, பலரும் ஓட்டல் தொழில்களி்ல் தடம் பதித்து வருகின்னறர். குறிப்பாக மாநில நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள், நான்கு வழிச்சாலைகளின் ஓரங்களிலும், ரோடுகள் சந்திக்கும் இடங்களிலும் ஓட்டல்கள் அதிக எண்ணிக்கையில் பெருகி வருகிறது. அந்த இடங்கள் ஜெகஜோதியாக மின்னொளியில் மிதக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு வரை ஆட்கள் நடமாடவே தயங்கிய இடங்கள் கூட இப்போது மின்னொளியில் மின்னுகின்றன. இந்த நிலை தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ளதாக உணவு பாதுகாப்புத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News