கவனம் மக்களே..அக்டோபரில் கோவிட்-19, 3ம் அலை : நிபுணர் குழு எச்சரிக்கை

அக்டோபர் மாதத்தில் கோவிட்-19, 3ம் அலை தொடங்கலாம், அது குழந்தைகளை பாதிக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Update: 2021-08-23 07:06 GMT

மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர்.

புது தில்லி :

மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி உருவாக்கப்பட்ட தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் (NIDM) கீழ் உள்ள நிபுணர்கள் குழு, இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கோவிட் -19 தொற்றின்  மூன்றாவது அலை உச்சத்தை எட்டக்கூடும் என்று பிரதமர் அலுவலகத்திற்கு (PMO) தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிய வந்துள்ளன.

என்ஐடிஎம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :

குழந்தைகளுக்கான சிறந்த மருத்துவம் தயார் நிலையில் இருக்கவேண்டும். அவர்கள் பெரியவர்களைப் போலவே பாதிப்பு அடையக்கூடும். குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டால், குழந்தைகளுக்கான மருத்துவ வசதிகள் அருகாமையில் இல்லை என்பதை நாம் இங்கு கருத்தில் கொள்ளவேண்டும் என்பதை அது குறிப்பிட்டுள்ளது.

கோவிட் -19 தொற்றுநோயின் மூன்றாவது அலையை சமாளிக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் (UTs) தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்துள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்தியா 2வது பரவலால் பாதிக்கப்பட்டது. தினசரி கோவிட் -19 பாதிப்புகளில் சரிவு ஏற்பட்டாலும், நிபுணர்கள் விதிமுறைகளில் தளர்வுக்கு எதிராக எச்சரித்துள்ளனர். இந்த தளர்வுகள் 3வது அலையைத் தூண்டக்கூடும் என்று கூறியுள்ளனர். இவ்வாறு கொரோனா பரவலின் மற்றொரு பாதிப்பை தவிர்க்க தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் சுகாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, 3வது அலையை சமாளிக்க "முழுமையான தயார்நிலையில்" இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காகவே 23,123 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 3வது அலை, மற்றவர்களை விட குழந்தைகளை அதிகம் பாதிக்கலாம் என்ற அச்சத்திற்கு நடுவில் குழந்தை மருத்துவ பராமரிப்பை வலுப்படுத்துவதற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்றும் அது கூறியுள்ளது.

"பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, கோவிட் -19 இன் 3ம் அலையை சமாளிக்க முழுமையான தயார் நிலையில் உள்ளது. அதை சமாளிக்க ரூ .23,123 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 3வது அலை மற்றவர்களை விட குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்று நிபுணர்கள் அஞ்சுவதால், குழந்தை பராமரிப்பை வலுப்படுத்துவதற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது"என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.

இந்தியாவில் இதுவரை 3.24 கோடி பேருக்கு கோவிட் -19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் 4.34 லட்சம் நோயாளிகள் தொற்று நோய்க்கு உள்ளாகினர். தற்போது, ​​இந்தியாவில் 3.33 லட்சம் பேருக்கு COVID-19 பாதிப்பு உள்ளது. அதே நேரத்தில் 3.16 கோடி நோயாளிகள் தொற்றுநோயிலிருந்து மீண்டுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

Similar News