மக்களவை துணைத்தலைவர் : காங்., புதிய கோரிக்கை..!

எதிர்க்கட்சிகளுக்கு மக்களவை துணைத்தலைவர் பதவி வழங்க வேண்டும் என காங்., வலியுறுத்தி உள்ளது.

Update: 2024-07-22 02:41 GMT

கோப்பு படம் 

பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 21) பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரன் ரிஜ்ஜு தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது.

மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, சிராக் பஸ்வான், அனுப்பிரியா படேல் உள்ளிட்டோரும் எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து ஜெய்ராம் ரமேஷ், கொடிக்குன்னில் சுரேஷ், கௌரவ் கோகாய், அசாதுதீன் ஓவைசி, சஞ்சய் சிங், சஞ்சய் ஜா, ராம்கோபால் யாதவ் உள்பட முக்கிய தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

அப்போது பேசிய காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகாய், நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் விவாதிக்க அனுமதியளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும், மக்களவை துணைத் தலைவர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டுமென்றும், நீட் தேர்வு  வினாத்தாள் விவகாரம் உள்ளிட்டவை குறித்தும் அவர் விவாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில், பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டுமென்ற கோரிக்கையை பாஜகவுடன் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தியுள்ளது. அதே போல, ஆந்திர பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. ஆனால், ஆந்திரத்தில் ஆளுங்கட்சியாக உள்ள தெலுங்கு தேசம் அமைதியைக் கடைப்பிடித்திருந்ததாகவும், கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News