தொலைந்து போன 10 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களை மீண்டும் பெற வழிமுறைகள்

தொலைந்து போன 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை மீண்டும் பெற வழிமுறைகளை கல்வித்துறை அறிவித்துள்ளது.

Update: 2022-10-10 11:51 GMT

நம்முடைய மாநில கல்வித் திட்டத்தில் 10-வது வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்பு என்பது  முக்கியமான இடத்தை பெறுகிறது. இந்த இரண்டு தேர்வுகளிலும் மாணவ, மாணவிகள் பெறும் மதிப்பெண்கள் தான் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையை நிர்ணயம் செய்யக்கூடியது. என்ஜினியரிங், மருத்துவம் போன்ற தொழிற்கல்வியில் சேருவதற்கும், பட்டப்படிப்பில் சிறந்த பாடங்களை தேர்வு செய்து படிப்பதும் 10 ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் முடிவு செய்யப்படுகிறது. அடுத்து என்ன படிக்கலாம் என்பதை இந்த இருவகுப்புகளிலும் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் மாணவ,மாணவிகளும் அவர்களுடைய பெற்றோர்களும் முடிவு செய்கிறார்கள்.

அரசு தேர்வு துறையால் வழங்கப்பட்ட இந்த அளவுக்கு  முக்கியத்துவம் வாய்ந்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள்  தொலைந்து விட்டால் அடுத்து என்ன செய்வது? அதை மீண்டும் எப்படி பெறுவது? என்று  மாணவ-மாணவிகளும்  அவர்களுடைய பெற்றோர்களும் அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் ஆழ்ந்து விடுவார்கள். தொலைந்த சான்றிழ்களை மீண்டும் பெறுவதற்கான தீர்வு இந்த செய்தியை படித்தால் கிடைக்கும்.   மாணவ, மாணவிகளின் 10 ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள் எதிர்பாராத வகையில் தொலைந்துவிட்டாலோ, மழை வெள்ளம், தண்ணீர் பட்டு,  தீயில் சிக்கி சேதம் அடைந்து விட்டாலோ, திருடு போய்விட்டால்,   கரையான் அரிப்பு  போன்ற செயல்களால் நாம் இழந்து விட்டால் உடனடியாக அவர்கள் வசிக்கும்  பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் தேவையான தகவல்களுடன் முதலில் புகார் அளித்து எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும். இந்த எப்.ஐ.ஆர். உதவியுடன்  சான்றிதழ் தொலைந்து போனது குறித்து நாளிதழ்களில் விளம்பரம் செய்ய வேண்டும். 

குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு போலீசார் வழக்கு பதிவு செய்தாலும் தொலைந்து போன மதிப்பெண் சான்றிதழ்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று காவல் துறையிடம் இருந்து ஒரு சான்றிதழ் பெற வேண்டும்.  அவ்வாறு பெறப்பட்ட  சான்றிதழை உங்கள் பகுதியில் உள்ள தாசில்தாரிடம்  கொடுத்து உங்களுடைய மதிப்பெண் சான்றிதழ் தொலைந்துவிட்டது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களிடம் இருந்தும் ஒரு சான்றிதழ் பெற வேண்டும். 

அதுமட்டுமல்ல மதிப்பெண் நகல் சான்றிதழ் பெறுவதற்காக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு வங்கி காசோலையை வாங்க வேண்டும் . பின்னர் எந்த பள்ளியில் படித்தீர்களோ அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலமாக மாவட்ட கல்வி அதிகாரிக்கு மதிப்பெண் நகல் சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப மனு அனுப்ப வேண்டும். அந்த மனுவில் படித்த ஆண்டு,  பள்ளியிலிருந்து விலகிய மாதம், நாள் ஆகியவற்றை தெளிவாக  மறக்காமல் குறிப்பிட வேண்டும்.  அப்படி அனுப்பக்கூடிய விண்ணப்ப மனுவில் நாளிதழில் செய்த விளம்பரம்,  வங்கி காசோலை, தாசில்தார் அளித்த சான்றிதழ் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.  விண்ணப்ப மனுவை மாவட்ட கல்வி அதிகாரிகள் பரிசீலித்து மாநில அரசு தேர்வு துறை இயக்குநருக்கு மாற்று மதிப்பெண் சான்றிதழ் தர சிபாரிசு செய்வார்.

 மாணவ மாணவிகள் படித்த ஆண்டின் தன்மைக்கு ஏற்ப மாற்று மதிப்பெண் சான்றிதழ்கள் 3 மாதங்களிலிருந்து 6 மாதங்களுக்குள் பள்ளிக்கல்வி தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும். தொலைந்துபோன மதிப்பெண் சான்றிதழுக்கு மாற்றுச் சான்றிதழை எந்த பள்ளியில் படித்தீர்களோ அந்த பள்ளி தலைமை ஆசிரியர் இருந்து பெற முடியும்.  இந்த முறையை கடைபிடித்து மாற்று மதிப்பெண் சான்றிதழ் பெறலாம். இது அசல் மதிப்பெண் சான்றிதழ் போன்று அங்கீகாரம் பெற்றது. மேற்படிப்புக்கு இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Tags:    

Similar News