சென்னையில் பிரபல உணவகத்தின் கழிவறையில் ரகசிய கேமரா: சப்ளையர் கைது

சென்னை கிண்டியில் உள்ள பிரபல உணவகத்தின் கழிவறையில், ரகசியமாக வீடியோ பதிவு செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Update: 2022-01-29 03:30 GMT

கைதான கண்ணன். 

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் பாரதி(49). இவர், மதுரவாயல் பகுதி 152வது வார்டு தி.மு.க. மகளிரணி அமைப்பாளர். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சைதாப்பேட்டையில் நடந்த நேர்காணலில், நேற்று பங்கேற்றார். பின்னர் கிண்டியில் உள்ள பிரபல சைவ ஓட்டலில் சாப்பிட சென்றார்.

ஓட்டலில் உள்ள கழிவறைக்கு சென்றபோது, எக்ஸாஸ்டர் பேன் பகுதியில் இருந்த, சிறிய அளவிலான அட்டை பெட்டியை பார்த்ததும், அவருக்கு சந்தேகம் எழுந்தது. உடனடியாக தனது உறவினரை அழைத்து, அந்த அட்டை பெட்டியை பரிசோதனை செய்தார்.

அதில், மொபைல்போன் மறைத்து வைக்கப்பட்டு, அதன் வாயிலாக வீடியோ பதிவு செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பாரதி, இது குறித்து கிண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார், ஓட்டல் சப்ளையர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

இதில், உணவகத்தில் சப்ளையராக வேலை பார்க்கும் விருதுநகரை சேர்ந்த கண்ணன்(28) என்பவர், மொபைல்போனை மறைத்து வைத்து வீடியோ பதிவு செய்தது தெரியவந்தது. விசாரணைக்கு பின் மெஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பிரபலமான ஓட்டல் ஒன்றில், கழிவறையில் மொபைல்போன் மூலம் வாடிக்கையாளர்கள் படம் பிடிக்கப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News