சென்னையில் பியூட்டி பார்லர் உரிமம் வாங்கி தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி

சென்னை மணலி அருகே பியூட்டி பார்லருக்கு உரிமம் வாங்கி தருவதாக கூறி ரூ. 25 லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2024-01-10 04:10 GMT

சென்னை அருகே பியூட்டி பார்லர் மற்றும் ஸ்பாவிற்கு உரிமம் வாங்கி தருவதாக கூறி 25லட்சம் ரூபாய் மோசடி செய்து, கொலை மிரட்டல் விடுத்ததாக பா.ஜ.க. நிர்வாகிகள் 6பேர் மீது 4பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை  மணலி புது நகரை சேர்ந்தவர் வளர்மதி (வயது 33.) இவர் மணலி புது நகரில் பா.ஜ.க.வில் 16வது வட்ட மகளிர் அணி பொருளாளராக இருந்து வந்துள்ளார். இவர் அம்பத்தூரில் பியூட்டிபார்லர் மற்றும் ஸ்பா நடத்தி வந்துள்ளார். வளர்மதிக்கு வெள்ளிவாயல்சாவடியை சேர்ந்த பி.ஜே.பி. முன்னாள் மாவட்ட பொது செயலாளரான பொன் பாஸ்கர் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார்.

இவர் வளர்மதியிடம் போரூரில் பியூட்டி பார்லர் மற்றும் ஸ்பா கடை வைக்க ஆசை வார்த்தை கூறியதாகவும், அம்பத்தூர் மற்றும் போரூர் என இரண்டு கடைகளுக்கும் லைசென்ஸ் வாங்கி தருவதாக கூறி வங்கி கணக்கில் வரவு மற்றும் ரொக்கமாக 25 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட பொன்.பாஸ்கர் சில மாதங்களுக்கு பிறகு அவரது நண்பர் அருண்குமார் பெயரில் அக்ரிமெண்ட் தயார் செய்துள்ளார்.

இதனையறிந்த வளர்மதி பொன்.பாஸ்கரிடம் சென்று முறையிட்ட போது முன்னாள் பா.ஜ.க. நிர்வாகி முத்துராஜ் மற்றும் அவரது நண்பர்களான பி.ஜே.பி. மாவட்ட தலைவர் செந்தில்குமார், பி.ஜே.பி. அரசு பிரிவு தொடர்பு மாநில தலைவர் பாஸ்கரன் ஆகியோர் வளர்மதியை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வளர்மதி பல்வேறு புகார்களை அளித்ததன் பேரில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் பதவியில் இருந்து செந்தில்குமாரை பா.ஜக. தலைமை நீக்கியுள்ளது. சில நாட்களுக்கு பிறகு மீண்டும் செந்தில்குமாருக்கு மாவட்ட தலைவர் பதவி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே வளர்மதியிடம் வாங்கிய பணத்தை திருப்பி தராமல் இருந்ததால் வளர்மதி பொன் பாஸ்கரிடம் பணத்தை திருப்பி கேட்ட போது ஆத்திரமடைந்த பொன் பாஸ்கர் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து வளர்மதியை கொலை செய்வதாக கூறி அச்சுறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் வளர்மதி தம்முடைய கடையையும் நடத்தவிடாமல் தொடர்ந்து அச்சுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி அண்மையில் வளர்மதி ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் மனுவில் கொலை மிரட்டல் விடுத்த பொன் பாஸ்கர், அரசு தொடர்பு தலைவர் பாஸ்கரன், மாவட்ட தலைவர் செந்தில்குமார், முத்துராஜ் உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனது பணம் ரூ. 25 லட்சத்தை மீட்டு தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே இரண்டு முறை மணலி புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என புகாரில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் மணலி புதுநகர் காவல் நிலையத்தில் பா.ஜ.க .நிர்வாகிகள் உள்ளிட்ட 6பேர் மீது 4பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் மாவட்ட பொது செயலாளர் பொன்.பாஸ்கர், முத்துராஜ், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார், அரசு தொடர்பு பிரிவு மாநில தலைவர் எம்.பாஸ்கரன், கார்த்திக்ராஜ், சிவப்ரகாஷ் உள்ளிட்ட 6பேர் மீது அவதூறாக பேசுதல், மோசடி, கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை என 4பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பா.ஜ.க. நிர்வாகிகள் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அக்கட்சி நிர்வாகிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News