ஆவடி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த மருத்துவ ஆலோசகர்

ஆவடி அருகே லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி மருத்துவ ஆலோசகர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2024-02-26 08:36 GMT

ஆவடி அருகே  இருசக்கர வாகனத்தில் சென்ற மருத்துவ ஆலோசகர் ஈச்சர் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

திருவள்ளூர் மாவட்டம் கொரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீவத்சன் (வயது 55).அதே பகுதியில் ஹெல்த் கன்சல்டிங் என்ற பெயரில் மருத்துவ ஆலோசனை வழங்கும் கிளினிக் நடத்தி வருகிறார். இவர் இன்று காலை ஆவடி அருகே அயப்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு குடும்பத்துடன் சென்றார். பின், இருசக்கர வாகனத்தில் அயப்பாக்கம்-டன்லப் வழியாக அம்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, அயப்பாக்கம் வழியாக அம்பத்தூர் நோக்கி சென்ற 'ஈச்சர்' லாரியை,ஸ்ரீவத்சன் முந்தி செல்ல முயன்றுள்ளார்.

இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த ஸ்ரீவத்சன் தலைமீது  ஈச்சர் லாரியின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் விசாரணை செய்ததில் ஈச்சர் வாகனத்தை ஓட்டி வந்தவர் அம்பத்தூர், அத்திப்பட்டு, செல்லியம்மன் நகர் பகுதியை சேர்ந்த கனவேல் (வயது 32) என்பது தெரிய வந்தது.இவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த விபத்து பற்றி ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News