நன்றி மறவாத எம்ஜிஆர்: கண்கலங்கிய கலைஞர்கள்

அப்போது தலைவர் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்.,... திரை கலைஞர்களுக்கு பரிசு வழங்கும் ஒரு நிகழ்ச்சி...

Update: 2023-03-11 16:15 GMT

எம்.கே.ராதாவின் காலில் விழுந்து வணங்கும் எம்.ஜி.ஆர்.,

விழா மேடையில் கலைஞர்கள், பழம்பெரும் நடிகர் எம்.கே.ராதா மற்றும் நடுநாயகமாக தமிழக முதல்வர் அமர்ந்திருந்தார். அவர்கள் அருகே அமைச்சர் நெடுஞ்செழியன் அமர்ந்திருந்தார். முதல்வர் கலைஞர்களுக்கு விருது வழங்கிக் கொண்டிருக்கிறார். அவர்களும் மகிழ்ச்சியோடு வாங்கிச் செல்கின்றனர். அடுத்து எம்.கே.ராதா விருது வாங்க வரும்போது முதல்வர், அவ்விருதை நெடுஞ்செழியனை வைத்து தரச் சொல்கிறார்.

எம்.கே.ராதாவுக்கும் மற்றவர்களுக்கும் அதிர்ச்சி. எம்.கே.ராதாவுக்கு மிகவும் ஆதங்கம். முதல்வர் கையினால் வாங்க முடியவில்லையே என்று. நொந்தபடியே தன் இருப்பிடத்திற்கு திரும்ப முற்படும் போது ஓர் அதிர்ச்சி...!!! திடீரென முதல்வர் மேடையில் இருந்த ராதாவின் காலில் விழுந்து வணங்குகிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத ராதா செய்வதரியாது திகைத்துப் போகிறார்.

ராதா ஏதோ சொல்ல முயலும் போது... அவரை தடுத்து எம்.ஜி.ஆர். "நான் ஆரம்பகாலத்தில் கஷ்டப்படும் போது, தங்களின் பெற்றோர் என்னை மகன் போலவும், தாங்கள் என்னை சகோதரன் போலவும் கருதி, இருக்க இடம் உணவு உடையும் கொடுத்து, எனக்கு சினிமாவில் வாய்ப்பும் கொடுத்தீர்கள். நான் இந்த நிலையை அடைய மூல காரணமே நீங்கள் தான். தங்களுக்கு போய் நான் விருது வழங்குவதா? அது தங்களை அவமதிக்கும் செயல் அல்லவா. தங்களன்றோ என்னை ஆசீர்வதித்து, அருளி, இச்சபையின் முன் கௌரவிக்கவேண்டும்" என்று சொன்னது தான் தாமதம்...

ராதா உள்பட அனைவரின் கண்களும் கசிந்தன. ஒரு மாநில முதல்வர் கௌரவம் பார்க்காமல் தனது நன்றியையும் விசுவாசத்தையும் உலகறியச் செய்ததை கண்டு அனைவருக்கும் வியப்பு.

தகவல் :- எம்.கே.ராதா மகன் Dr.Sukumar Madras Radha

Tags:    

Similar News