வரலாற்று படத்தை எடுக்கப்போகிறாரா சுந்தர் சி?

லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படத்தை சுந்தர்.சி இயக்க உள்ளார் என்ற தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-11-17 07:03 GMT

தமிழ் சினிமாவில் 'முறைமாமன்' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான சுந்தர்.சி பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். 

இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இயக்குனர் சுந்தர் சி அவருக்கே உரித்தான கலகலப்பான படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றவர். குறுகிய காலத்திலேயே ரஜினி, கமல், கார்த்திக், பிரசாந்த், அர்ஜூன், சரத்குமார் மற்றும் அஜித் குமாருடன் இணைந்து படம் பண்ணினார். உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், அன்பே சிவம் படங்கள் இவரது இயக்கத்தில் குறிப்பிடத்தக்க படங்கள்

ரஜினிகாந்த், கமல், அஜித், கார்த்திக் என பல முன்னணி நடிகர்களை இயக்கிய சுந்தர்.சி குறித்து தற்போது வெளியாகியுள்ள ஒரு அப்டேட் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நகைச்சுவை, காதல் திரைப்படங்கள் எடுப்பதில் வல்லவரான சுந்தர்.சி அரண்மனை படத்திற்கு பிறகு கொஞ்சம் ஹாரர் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். காமெடி கலந்த கமர்சியல் மசாலா திரைப்படம் தான் சுந்தர்.சியின் வெற்றிக்கு முக்கியமான காரணம் என்பதால் திரும்பவும் நகைச்சுவை கலந்த காதல் கதைக்கு திரும்பினார். அவரது 'காஃபி வித் காதல்' திரைப்படம் நவம்பர் 4ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்களை பெற்று இருந்தாலும் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை.

காபி வித் காதல் படம் எதிர்பாராத விதமாக படுதோல்வி அடைந்ததால், சுந்தர் சி இப்போது புதிய திட்டம் ஒன்றை போட்டுள்ளார். கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக கிடப்பில் போட்ட படம் ஒன்றை கையில் எடுத்துள்ளார்.

அதாவது கடந்த 2018ம் ஆண்டு ஆர்யா மற்றும் ஜெயம் ரவியை வைத்து பிரம்மாண்ட வரலாற்று நாவலான சங்கமித்ரா படத்தை இயக்க சுந்தர் சி முடிவு செய்து இருந்தார். மேலும் இப்படத்தில் ரகுமான் இசையமைப்பதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் அந்தப் படம் அப்போதே தடைபட்டு நின்று போனது. இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இப்படம் மீண்டும் தொடங்க உள்ளதாம். மேலும் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் கிராபிக்ஸ் மற்றும் டெக்னிக்கல் வேலைகள் ஒரு வருடத்திற்கு மேலாகவே நடைபெற்று வருகிறதாம். இதனால் படப்பிடிப்பு தொடங்கிய உடனே படத்தை எளிதாக முடித்து விடலாம் என சுந்தர் சி கூறியுள்ளார். மேலும் ஆர்யா மற்றும் ஜெயம் ரவி தான் இப்போதும் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

இந்த படத்தை லைக்கா நிறுவனத்துடன் உதயநிதி கைகோர்த்து இப்படத்தை தயாரிக்க உள்ளதாக பேசப்படுகிறது. தமிழ் சினிமாவின் இரு பெரிய நிறுவனங்களும் இப்படத்தை தயாரிப்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

காமெடி படங்களில் கலக்கி வந்த சுந்தர் சி சில ஹாரர் படங்களிலும் வெற்றி கண்டுள்ளார். இந்நிலையில் முதல்முறையாக வரலாற்று படத்தை எடுக்க உள்ளதால் காபி வித் காதல் படத்தை போல் இந்தப் படத்தையும் சொதப்பி விட கூடாது என ரசிகர்கள் கேட்டுக் கொள்கின்றனர்

Tags:    

Similar News