இந்த மூஞ்சிக்கு ஹீரோவா..? 'விஜய்'யை நோகடித்த காலங்கள்..!

எலிக்கு மீசை மொளைச்ச மாதிரி முகத்தை வச்சிக்கிட்டு ஹீரோவாக எப்படி நடிக்க வந்தார்? என்ற கேள்வி, விஜய்-ன் வெற்றிப்பயணத்துக்கு தூண்டுகோலானது.

Update: 2022-01-15 10:45 GMT

விஜய் 

இந்த 18 வயது இளைஞன் J.C.விஜய் -தனது விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படிப்பை பாதியில் விட்டு விட்டு நடிகராக வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அது அவ்வளவு எளிதாக நடக்கவில்லை. அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு விஜய்யை திரைப்படத்தில் அறிமுகப்படுத்த ரூ.35 லட்சங்கள் தேவைப்பட்டது. அதற்காக பிரபல பைனான்சியர் பபூத்மல் ஜெயின்-ஐ சந்திக்க முடிவு செய்தார். சந்திரபிரகாஷ் ஜெயின் மற்றும் உத்தம்சந்த் ஜெயினின் மாமாதான் பபூத்மல் ஜெயின்.


தனது திட்டப்படி எஸ்.ஏ.சந்திரசேகரன் விஜய்யின் புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டு பபூத்மல் ஜெயின்-ஐ சந்தித்தார். விஜய்யின் படத்தை பார்த்த ஜெயின், 'விஜய் ஹீரோவாக நடிப்பதற்கு பொருத்தமானவர் இல்லை என்று பணம் கொடுக்க மறுத்துவிட்டார். பின்னர் எஸ்.ஏ.சந்திரசேகரன் அவரது உறவினரான பிரிட்டோவைச் சந்தித்து பணம் கேட்கச் சென்றார். அவர் 6 மணிநேரம் காத்திருக்க வைத்துவிட்டு, குரலை சற்று உயர்த்தி,' பையனுக்கு 18 வயசுதான் ஆகுது. படிப்பில் கவனம் செலுத்தச் சொல்.சினிமா கனவுகளை கை கழுவச்சொல்'என்று அறிவுரை வழங்கினார்.

ஆனாலும், எஸ்.ஏ.சந்திரசேகரன் உறவினர் என்பதால் பிரிட்டோ தயக்கத்துடன் பணத்தை கடனாக கொடுத்தார். அந்த பணத்தில் 'நாளைய தீர்ப்பு' படம் ரிலீசானது. ஆனால் படம் படுதோல்வியடைந்தது. அந்த காலகட்டத்தில் பத்திரிக்கையாளர் ஜெயசீலன், 'இந்த நடிகர் மீசை முளைத்த எலி போல இருக்கிறார். இவரெல்லாம் சினிமாவில் நடிக்க முடியுமா?' என்று எழுதினார்.

இப்படியான விமர்சனங்களால் விஜய் மிகவும் மன உளைச்சலில் இருந்தார். அவர் சினிமாவை விட்டு வெளியேற விரும்பினார். ஆனால் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன், ' நீ இப்போது இண்டஸ்ட்ரியை விட்டு வெளியேறுவது கோழைத்தனம். நீ தான் ராஜா என்பதை அவர்களுக்குக் காட்ட வேண்டும். உன் திறமையை வெளியுலகுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதில் நீ உறுதியாக இரு.' என்று நம்பிக்கை ஊட்டினார்.

விஜய் பற்றிய கசப்பான கட்டுரையை ஒரு பிரதி எடுத்து ஃப்ரேம் போட்டு வீட்டின் வரவேற்பறையில் வைத்தார். அந்த கசப்பான அனுபவங்கள் உனக்கான பாதையை தீர்மானிக்கும் என்று கூறினார். கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் குறிப்பாக 18 வயதில் விஜய் தனது சொந்த மாமா வீட்டிற்கு வெளியே 6 மணி நேரம் நின்ற அந்த மோசமான நினைவுகள் - தளபதி விஜய்யாக மாறுவதற்கு வழிவகை செய்தது.

அதே ஜெயின் பைனான்சியர்கள் இப்போது விஜய் படத்தை தயாரிக்க கெஞ்சுகின்றனர். அதே பிரிட்டோ மாமா தனது மருமகனை வைத்து படம் தயாரிக்க 4 ஆண்டுகள் அவகாசம் கேட்டார். அதே பத்திரிக்கையாளர் ஜெயசீலன் 2005ம் ஆண்டில் பொங்கல் ரிலீஸில் கில்லியின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விஜய்யை பேட்டி கண்டதையும் எஸ்.ஏ. சந்திரசேகரன் நினைவுபடுத்தி கூறியிருந்தார்.

இன்னும் அந்த ஃபிரேம் செய்யப்பட்ட செய்தித்தாள் கட்டுரை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் அறையில் பெருமையுடன் தொங்கிக்கொண்டிருக்கிறது.  இன்று தனக்கென ஒரு நடிப்பு பாணியில் விஜய் வெற்றிப்பயணத்தை தொடர்கிறார்.

Tags:    

Similar News