இசைஞானி இளையராஜா பிறந்ததினம் இன்று

தன்னையறியாமலே இந்தி திணிப்புக்கு எதிரான கலகக்காரராக இருந்தவர் இளையராஜா

Update: 2021-06-02 04:52 GMT

இளையராஜா இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000 க்கும் மேற்பட்ட தமிழ் , தெலுங்கு, மலையாளம் , கன்னடம் , இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைப்புத் துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது. தமிழக நாட்டுப்புற இசை , கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பின்னணி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.

இளையராஜாவின் இயற்பெயர் ராசய்யா. தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் ராமசாமி, தாயார் சின்னத்தாயம்மாள். பாவலர் வரதராஜன்,

டேனியல் பாஸ்கர், அமர் சிங் ஆகிய மூவரும் இவருடைய தமையர்களாவர். இவருடைய மனைவியின் பெயர் ஜீவா. இவருடைய பிள்ளைகள் கார்த்திகேயன், யுவன் ஷங்கர் மற்றும்

பவதாரிணி. இவருடைய தமையனார்கள் பாவலர் வரதராஜன், பாஸ்கரன் மற்றும் அமர் சிங் எனப்படும் கங்கை அமரன் , இவருடைய பிள்ளைகள் கார்த்திகேயன் (கார்த்திக் ராஜா) , யுவன் ஷங்கர் (யுவன் சங்கர் ராஜா), பவதாரிணி ஆகியோரும் இசையமைப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவயதிலேயே ஆர்மோனியம் வாசிப்பதிலும், கிட்டார் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். 1961 இல் இருந்து 1968 வரை அவருடைய சகோதரர்கள் மூவருடனும் இந்தியாவில் உள்ள பலஇடங்களுக்கு நாடகக்குழுவோடு சென்று சுமார் இருபதாயிரம் கச்சேரிகளிலும் நாடகங்களிலும் பங்கு கொண்டார். 1969 ஆம் ஆண்டு தன் 26ஆம் வயதில்

திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஆர்வத்தில் சென்னைக்கு வந்தார். சென்னையில் தன்ராஜ் என்பவரிடம் மேற்கத்திய பாணியில் பியானோ கருவியையும், கிதார் கருவியினையும் வாசிக்கக் கற்றுக்கொண்டார். பின்னர் லண்டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் Classical guitar (Higher Local) தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றார்.

1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குன்றாமல் வழங்கினார். அன்னக்கிளி திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்து எஸ். ஜானகி பாடிய "மச்சானைப் பாத்தீங்களா.." என்ற பாடல் மிகப் பிரபலமானது. அதைத் தொடர்ந்துபதினாறு வயதினிலே, பொண்ணு ஊருக்கு புதுசு போன்ற படங்களில் நாட்டுப்புற மணம் கமழ இவர் இசையமைத்த பாடல்கள் பெரும் வரவேற்பினை பெற்றன. நாட்டுப்புற இசை மட்டுமல்லாமல், கருநாடக செவ்விசை மெட்டுக்களில் இவர் அமைத்த பாடல்களாகிய, மோகன ராகத்தில் கண்ணன் ஒரு கைக்குழந்தை, ரீதி கௌளை ராகத்தில் சின்னக் கண்ணன் அழைக்கிறான் போன்றன இவருக்கு

மேலும் புகழினைத் தேடித்தந்தன. முதன் முறையாகத் தமிழ் சினிமாவில் ஸ்டீரியோ முறையில் "ப்ரியா" எனும் திரைப்படத்திற்கு இசையமைத்தார். 


ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்கள் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கப்படுகின்றனர். ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிரா, இளையராஜா இசையமைத்த சிம்பொனியினை இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இளையராஜா தமிழ் திரைப்படக் கலைஞர்களால் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கப்படுகின்றார்.

இவருடைய இசைப்பணிகள் எண்ணில் அடங்காதவை. இவருடைய மகன் யுவன் சங்கர் ராஜா சிறந்த இசை அமைப்பாளராக வளர்ந்துஉள்ளார்.

எழுபதுகளின் இறுதி காலமது...

1930 ஆம் ஆண்டுகளில் தொடங்கிய மொழித் திணிப்புக்கு எதிரான சீற்றம் தணியத் தொடங்கிய சூழல்.இன்னிசை வழியே இந்திய துணைக்கண்டத்தில் வாழும் ஆதிக்க மனநோயாளிகளின் அன்னை மொழியாகிப் போன 'ஹிந்தி' தமிழ்நாட்டில் மெல்ல மெல்ல கால் பதிக்கத் தொடங்கிய நேரம். பெல்பாட்டம் ரெட்ரோ வகை இளைஞர்களின் முணுமுணுப்பாக அப்போது பாலிவுட் பாடல்கள் மாறத்தொடங்கின. தமிழ் பாடகர்களின் உச்சரிப்பு பிழைகளை பாட்டளவில் கூட ஏற்காத இன்னிசை மன்னர் எம்.எஸ்.வீ தனது திரையுலக அந்திமக் காலத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறார் என்றே சொல்லலாம். அதே காலத்தில் பண்ணைப்புரத்தில் இருந்து வந்த அந்த ராசைய்யா தனது ஒற்றை ஆர்மோனியப் பெட்டியை வைத்து, தன் இசை சாம்ராஜ்ஜியத்தை கட்டமைக்கத் தொடங்குகிறார்.

'அன்னக்கிளி உன்ன தேடுது...' என அதன் முதல் தனியிசை தமிழ் நிலத்தில் அடுத்த கட்ட ஆலாபனையை தொடங்கியது தான் தாமதம். காட்சிகள் மாறுகின்றன. அடுத்த ஓரிரு ஆண்டுகளில் மீண்டெழுந்த தமிழிசை தன்னை மக்களிசையாக தகவமைத்துக் கொள்கிறது. மைலாப்பூர் கச்சேரி சபாக்களில் தொடைத் தட்டி ரசிக்கும் 'சுத்த சன்னியாசி'களின் வசம் மட்டும் அது நாள் வரை கர்நாடக இசையாக வாசம் செய்து வந்த பெருங்கலை ஒன்று..ஞான சூனியங்களின் இசையாக, ஊர் நாட்டானின் இசையாக, பஞ்சப்பறாரிகளின் இசையாக, பாமர மக்களின் இசையாக, பட்டிக்காட்டான்களின் இசையாக திரையிசையாக மாறுகிறது.

ஒலிக்குறிப்பு ஓசைகளுக்கு அவர் தந்த அதே முக்கியத்துவம் தமிழுக்கும் தந்தார். தமிழை தமிழாக தந்த கவிஞர்களுக்கு அவர் வழியே சங்கம் நடத்தும் வாய்ப்பு ஏற்பட்டது. தமிழை கொல்லாத இரசிக்கத்தக்க இசை - பல இடங்களில் மொழியே தேவையற்றதென சொல்லிய இசை அவரது இசை. இளையராஜா எனும் சிம்போனி மாமேதை இசைக்கு செய்த தொண்டைவிட, தமிழுக்கு செய்த தொண்டு அதிகம். தமிழிசை மீட்பரான ஆப்ரகாம் பண்டிதரின் பணிகளுக்கு இணையான பணியை செய்தவர் அவர். பார்ப்பனீயம் - வைதீகம் - சனாதனம் கைக்கொண்டிருந்த ஏழிசையை ஏழை சனங்களின் இசையாக்கிய அவர் தாம் #இசைஞானி

தன்னையறியாமலே இந்தி திணிப்புக்கு எதிரான கலகக்காரராக இருந்தவர் !

Tags:    

Similar News