மதுரையில் ரசிகர்களுடன் விடுதலை திரைப்படத்தை பார்த்து ரசித்த நடிகர் சூரி!

விடுதலை திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் சூரி மதுரையில் ரசிகர்களுடன் அமர்ந்து அந்த படத்தை பார்த்து ரசித்தார்.

Update: 2023-03-31 12:55 GMT

மதுரை சினிப்பிரியா திரையரங்கில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய நடிகர் சூரி.

நடிகர் விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயங்கி உள்ள விடுதலை படம் இன்று திரைக்கு வந்தது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.

இந்த நிலையில், படத்தின் கதை நாயகமான நடிகர் சூரி இன்று மதுரையில் உள்ள சினிப்ரியா திரையரங்கில் ரசிகர்களோடு அமர்ந்து விடுதலை திரைப்படத்தை பார்த்து ரசித்தார். அவர் வருகையை முன்னிட்டு திரையரங்கின் முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.

திரையரங்கின் முன்பு வைக்கப்பட்டிருந்த நடிகர் சூரியின் கட்அவுட்டுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர். திரையரங்குக்கு வந்த நடிகர் சூரியை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, திரையரங்கில் ரசிகர்கள் மத்தியில் நடிகர் சூரி பேசியதாவது:


விடுதலை திரைப்படம் தாமதமானதற்கு என்ன காரணம் என பலரும் கேட்டனர். ஆனால், இவ்வளவு தாமதத்திற்கு பின்னும் நல்ல திரைப்படத்தை கொடுத்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன். விடுதலை திரைப்படத்தை தயாரிப்பாளர்களும் ரசிகர்களும் வெகுவாக கொண்டாடி வருகிறார்கள்.

எனது குலசாமி சங்கையாவை கும்பிட்டு விட்டு திரைப்படம் பார்க்க வந்திருக்கிறேன். நல்ல திரைப்படத்தை மக்கள் வெற்றி பெற வைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எந்த திரைபடத்தையும் வெற்றி படமாக கொண்டு செல்வது ரசிகர்கள் தான்.

நான் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படத்தை எனது ரசிகர்கள் வெற்றியுடன் கொண்டாடி வருகின்றனர். தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் திரைப்படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பதை விட வேறு என்ன பெருமை இருக்கிறது.

இந்த படத்திற்கோ அல்லது இந்த படத்தில் நடித்த யாருக்காவது தேசிய விருது கிடைத்தாலும் அது எனக்கு கிடைத்த போன்ற மகிழ்ச்சியை தரும். தேசிய விருது பெற்ற வெற்றிமாறனின் படத்தில் நடித்ததை விட எனக்கு வேறு என்ன வேண்டும். மிகப்பெரிய நடிகர் விஜய் சேதுபதியோடு நடித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

இந்தத் திரைப்படத்திற்காக ஒவ்வொரு கலைஞர்களும் மிகவும் கஷ்டபட்டு இருக்கிறார்கள். எல்லோரும் சமம், எல்லோரும் ஒன்றுதான் என்பதை தெரியப்படுத்த தான் திரையரங்கு வந்தது. நீ நான் என்ற வேறுபாடு திரையரங்கிற்கு கிடையாது.

சென்னை ரோஹினி திரையரங்கில் நரிக்குறவர் இன பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவத்திற்கு நான் வருத்தப்படுகிறேன். எந்தச் சூழலில் இது நடந்தது என்று தெரியவில்லை. திரையரங்கில் அனைவருக்கும் சம உரிமை உள்ளது என நடிகர் சூரி தெரிவித்தார்.

Tags:    

Similar News