ரீல் ஜோடி.. ரியல் ஜோடியானது.. நடிகை மஞ்சிமாவை மணந்தார் கௌதம் கார்த்திக்.. திருமண புகைப்படங்கள்..

நடிகர் கௌதம் கார்த்திக்-நடிகை மஞ்சிமா திருமணம் சென்னையில் இன்று குடும்பத்தினர் முன்னிலையில் மிகவும் எளிமையாக நடைபெற்றது.

Update: 2022-11-28 14:29 GMT

மணக்கோலத்தில் நடிகர் கௌதம் கார்த்திக்- நடிகை மஞ்சிமா.

திரைப்படத்தில் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக டூயட் பாடி நடித்தவர்கள் பலர் நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்து கொண்டு வாழ்த்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் நீண்ட நாட்களாகவே பல படங்களில் இணைந்து நடித்த நடிகர், நடிகை திருமணம் செய்து கொள்வது நடந்து கொண்டேதான் இருகிறது.

இதேபோல, திரைத்துறையில் ஒன்றாக பணியாற்றிய இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் என பலரும் திருமண வாழ்க்கையில் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில், இதுவரை ரீல் ஜோடியாக இருந்த நடிகர் கௌதம் கார்த்திக்- நடிகை மஞ்சிமா இன்று முதல் இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ளனர். 


நடிகர் கௌதம் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் - நடிகை ராகினி தம்பதியின் மகன் ஆவர். இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து, பல வெற்றிப் படங்களில் நடித்து உள்ளார்.

முன்னணி நடிகர்களான பார்த்திபனுடன் இணைந்து யுத்தம் செய், விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லுறேன் உள்ளிட்ட படங்களிலும் நடித்த கௌதம் கார்த்திக், கடந்த 2019 ஆம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் தேவராட்டம் படத்தில் நடித்தார்.

அந்தப் படத்தில் கௌதம் கார்த்திற்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சிமா மோகன் நடித்து இருந்தார். தமிழ் பெண் போல இருப்பதாகவும், இயல்பாக நடிக்கிறார் என்றும் நடிகை மஞ்சிமாவுக்கு அந்தப் படத்தில் நல்ல பெயர் கிடைத்தது. மலையாளத்தில் பத்திற்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த மஞ்சிமா மோகன் ஒரு வடக்கன் செல்பி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.


தொடர்ந்து, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்து வெளியான அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் மஞ்சிமா மோகன் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். பின்னர்தான், தேவராட்டம் படத்தில் கௌதம் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்தார்.

அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது கௌதம் கார்த்திக்கும், மஞ்சிமாவும் நெருங்கி பழகினர். அப்போதே இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் பரவியது. இருப்பினும், இருவர்களும் நண்பர்களாகவே பழகுகிறோம் என தெரிவித்தனர். பின்னர், காதலில் விழுந்த இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமீபத்தில் அறிவித்தனர்.

இந்த நிலையில், நடிகர் கௌதம் கார்த்திக்கும், நடிகை மஞ்சிமாவும் இணைந்து கடந்த 23 ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறும்போது, பெரியோர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆசியோடு எங்கள் இருவருக்கும் சென்னையில் நவம்பர் 28 ஆம் தேதி திருமணம் நடைபெறுகிறது என்றும் சென்னையில் உள்ள ஒரு தனியார் இடத்தில் சிறிய குடும்ப நிகழ்வாக திருமணம் நடைபெறும் என்றும் அறிவித்தனர்.


அதன்படி, சென்னையில் இன்று நடைபெற்ற திருமண நிகழ்வில், நடிகை மஞ்சிமாவை நடிகர் கௌதம் கார்த்திக் மணந்து கொண்டார். இந்த நிகழ்வில், இருவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். தற்போது, அவர்களது திருமண புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இல்லற வாழ்வை தொடங்கியுள்ள கௌதம் கார்த்திக்- மஞ்சிமா ஜோடிக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு உள்ளனர்.

Tags:    

Similar News