ஆபரேஷனுக்கு காலையே மாத்திட்டீங்களே : கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பரபரப்பு

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மூதாட்டிக்கு தவறான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-04-09 03:15 GMT

குருவம்மாள்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி மறவர் காலனியைச் சேர்ந்த மணி முருக குமார் மனைவி குருவம்மாள் (67). மணி முருக குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகன்கள் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் குருவம்மாள் கடந்த ஜனவரி மாதம் தனது வலதுகால் மூட்டுப்பகுதியில் வழி இருப்பதாக கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தார்.

கடந்த 3 மாத காலமாக சிகிச்சை பெற்ற அவர், கடந்த 21-ம் தேதி அரசு மருத்துவமனைக்கு வந்தபோது அவரை பரிசோதித்த மருத்துவர் வலதுகாலில் சிறிய அறுவை சிகிச்சை செய்தால் வலி குணமாகிவிடும் என தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து 22-ம் தேதி குருவம்மாள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு கடந்த 4-ம் தேதி அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இதில் வலது காலுக்கு பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு விட்டது. வலது கால் பிரச்சினைக்காக வந்த தனக்கு இடது காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதனால் எனக்கு பாதிப்பு அதிகமாகி உள்ளது என குருவம்மாள் குற்றஞ்சாட்டி உள்ளார்.

கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் ஏற்கனவே இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது அதனை மெய்ப்பிக்கும் வண்ணம் மூதாட்டி ஒருவருக்கு தவறுதலாக அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இங்கு பணிபுரியும் மருத்துவர்கள் அனைவரும் தனியாக பெரிய அளவிலான மருத்துவமனைகளை கட்டி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் தங்களது வியாபாரம் கொழிக்க அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் இடைத்தரகர்களை அனுமதித்துள்ளனர். இதில் செவிலியர்களும் உண்டு.

இங்கு கடந்த மாதம் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபரை இங்கிருக்கும் செவிலியர்களை உயிர் பயம் காண்பித்து, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கூலித் தொழிலாளியான அவருக்கு தனியார் மருத்துவமனையில் நடத்தப்பட்ட அறுவை சிகிச்சை மற்றும் இதர சிகிச்சைகள் என சுமார் ஒரு லட்சம் வரை அவரிடம் தனியார் மருத்துவமனை நிர்வாகம் பெற்றுக்கொண்டது. தங்களுக்கு வாடிக்கையாளரை அனுப்பிவைத்த செவிலியர்களுக்கு அந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் இடைத்தரகருக்கான தொகையும் வழங்கியதாக கூறப்படுகிறது.

எனது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் இந்த விஷயத்தில் நேரில் தலையிட்டு உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டு பிரச்சனைகளுக்கு உரிய மருத்துவர்கள் மற்றும் அரசு ஊதியம் பெற்றுக்கொண்டு தனியார் மருத்துவமனைக்கு ஆதரவாக செயல்படும் செவிலியர்கள், அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் எல்லாமுமாக உலாவரும் இடைத்தரகர்கள் ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News