கூடலூர் ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்லும் எண்ணமில்லை என அறிவிப்பு

கூடலூர் ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்லாமல், மயக்க மருந்து செலுத்தி மட்டுமே பிடிக்கத் திட்டமிட்டுள்ளதாக, தமிழ்நாடு முதன்மை உயிரின வனபாதுகாவலர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-10-03 05:30 GMT

கூடலூர் பகுதியினரை அச்சுறுத்தி வரும், ஆட்கொல்லி புலியை மயக்க மருந்து செலுத்தி மட்டுமே பிடிக்க திட்டமிட்டுள்ளதாக, தமிழ்நாடு முதன்மை உயிரின வனபாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவில், தேவன்-1, ஸ்ரீமதுரை, முதுமலை ஊராட்சி பகுதிகளில் ஊருக்குள் புலி புகுந்து கால்நடைகளை அடித்து கொன்றது. இதுவரை, நான்கு பேரை கொன்றுள்ளது; கால் நடைகளையும் கொன்றது. இதனால் அந்த ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புலியை பிடிக்க அடுத்தடுத்து களமிறங்கிய வனத்துறை மற்றும் மருத்துவக்குழுவினர், புலி நடமாடும் பகுதியை கண்காணிக்க, கால்நடைகளை கட்டிவைத்து தேடுதல் பணி மேற்கொண்டுள்ளனர். வனப்பகுதிகளில் சென்றிருக்கும் வனக்குழுவுக்கு அதிநவீன தொடர்பு கொள்ளும் வகையில்,  வாக்கி டாக்கி மூலம் புலியின் நடமாட்டத்தை தெரிவிக்கவும், ட்ரோன் கேமரா மூலம் ஆட்கொல்லி புலியின் நடமாட்டம் இருக்கும் பகுதியை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, ஆட்கொல்லி புலியை மயக்க மருந்து செலுத்தி மட்டுமே பிடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்லும் எண்ணம் வனத்துறைக்கு இல்லை எனவும், தமிழ்நாடு முதன்மை உயிரின வனபாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் தெரிவித்தார். மேலும், ஒரிரு நாளில் புலி பிடிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

Tags:    

Similar News