சிவகாசி அருகே, வேனில் கடத்தப்பட்ட ரேசன் அரிசி..!

சிவகாசி அருகே, வேனில் கடத்தப்பட்ட ரேசன் அரிசி..!

ரேசன் அரிசி கடத்திய வேன் 

சிவகாசி அருகே, ரேசன் அரிசி கடத்திச் சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

சிவகாசி :

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பகுதியில், ரேசன் கடைகளில் இருந்து அரிசி மூடைகள் கடத்தப்படுவதாக, உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில், தென் மண்டல உணவு பொருள் பாதுகாப்பு காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்ராஜன் தலைமையில், சிவகாசி - திருத்தங்கல் சாலையில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது திருத்தங்கல், பாண்டியன் நகர் பகுதியில் உள்ள 2 ரேசன் கடைகளில் இருந்து அரிசி மூட்டைகளை ஒரு மினி சரக்கு வேனில் கும்பல் ஒன்று கடத்துவதை அதிகாரிகள் பார்த்தனர்.

அதிகாரிகள் கவனிப்பதை பார்த்த மினி சரக்கு வேனின் ஓட்டுநர் மற்றும் இரண்டு லோடுமேன்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மினி சரக்கு வேனை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த வேனில் 50 கிலோ எடை கொண்ட 29 மூடைகளில் ஆயிரத்து, 500 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ரேசன் அரிசி மூடை கடத்தலில் ஈடுபட்ட ஆலமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ராஜேஸ்வரன் (26) என்பவரை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் கடத்தல் ரேசன் அரிசி மூட்டைகள் , கடத்தலுக்கு பயன் படுத்திய மினி சரக்கு வேனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட மினி வேன் ஓட்டுநர் மற்றும் 2 லோடு மேன்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story