அருப்புக்கோட்டை நர்சிங் கல்லூரி மாணவிகள் படிப்பை தொடர ஏற்பாடு: கலெக்டர் உறுதி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டம்
அருப்புக்கோட்டை நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகளின் படிப்பு தொடர மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையி்ல் செயல்பட்டு வந்த தனியார் நர்சிங் கல்லூரி மூடப்பட்டதால், அதில் படித்து வந்த மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் படிப்பு தொடர்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி கூறினார்.
தனியார் நர்சிங் கல்லூரி தலைவர் ஜான்கிரேஸ் என்பவர், கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் அந்த நர்சிங் கல்லூரி மூடப்பட்டது. இந்த நிலையில் அந்த கல்லூரியில் படித்து வந்த மாணவ, மாணவிகள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு திரண்டு வந்து, தங்கள் படிப்பு தொடர்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.
ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாணவர்களை சந்தித்து பேசிய மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி, மாணவர்களின் எதிர்காலம் பாதிக்காத வகையில், மாநிலத்திற்குள் உள்ள மற்ற அமைப்புகளிடம் பேசி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் நர்சிங் கல்லூரியில் மாணவர்கள் கொடுத்துள்ள சான்றிதழ்கள் அனைத்தையும் பாதுகாக்கும் வகையில் வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் கல்வி குறித்து அச்சப்பட வேண்டாம். அவர்களின் எதிர்காலத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் விரைவாக எடுக்கப்படும் என்று ஆட்சியர் மேகநாதரெட்டி மாணவர்களிடம் உறுதி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu