வந்தவாசி அருகே ஊரக வேலை சரிவர வழங்காததை கண்டித்து சாலைமறியல் போராட்டம்
வந்தவாசி அருகே சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தில் தேசிய ஊரக வேலை திட்டத்தில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் தங்களுக்கு சரியான முறையில் வேலை வழங்கவில்லை என குற்றம்சாட்டி வந்தனர். மேலும் மும்முனி கிராமத்தில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வழங்கப்படாதாலும் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
இது சம்பந்தமாக வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு புகார் தெரிவித்தும் எந்தவதமான நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் நேற்று மாலை வந்தவாசி-ஆரணி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தகவலறிந்த வந்தவாசி போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்குவதற்கும், குடிநீர் வழங்குவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
பின்னர் கிராம பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு சென்றனர். இந்த மறியலால் நெடுஞ்சாலையில் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu