ரேணுகாம்பாள் கோயிலில் ஆடி திருவிழா: கோட்டாட்சியர் ஆய்வு

ரேணுகாம்பாள் கோயிலில் ஆடி திருவிழா: கோட்டாட்சியர் ஆய்வு

ரேணுகாம்பாள் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட கோட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள்

படவேடு ரேணுகாம்பாள் கோயில் ஆடி திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து கோட்டாட்சியர் தலைமையில் ஆய்வு நடைபெற்றது

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஆடி மாதம் 7 வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்களுக்கு பாதுகாப்பு, அடிப்படை வசதி குறித்து ஆரணி கோட்டாட்சியர் தலைமையில் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், படவேடு ஊராட்சியில் பழைமை வாய்ந்த ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட இந்தக் கோயிலில், ஜூலை 19-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 30 வரை 7 வெள்ளிக்கிழமைகளில் ஆடிவெள்ளித் திருவிழாக்கள் நடைபெறுகிறது.

கோயிலுக்கு திருவண்ணாமலை, வேலூா், விழுப்புரம், திருச்சி, தருமபுரி, கோவை, சென்னை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் ஆடி மாதம் முழுவதுமே வருகை தருவர். குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்பாள் தரிசனம் செய்ய வருகை தருவார்கள்.

ஆடி திருவிழாவையொட்டி , கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வ து குறித்து அனைத்து துறைஅலுவலா்களுடன் ஆரணி கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் தலைமையில் ஆய்வு நடைபெற்றது.

அப்போது, கோயில் சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பொங்கல் வைக்குமிடம், தங்கும் அறைகள், தங்கும் விடுதி, உணவுக்கூடம், முடி காணிக்கை செலுத்தும் வசதி, கழிப்பறை வசதி, போக்குவரத்துக்கு சிறப்பு பேருந்து வசதி, சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் வெள்ளி, ஞாயிறு ஆகிய நாள்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பாதுகாப்புக்காகவும் கூடுதல் காவல்துறையினரை பணியில் ஈடுபடுத்துதல், கோயில் வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் வைத்து, கண்காணிக்க உரிய வசதிகள் ஏற்படுத்த வேண்டும். மருத்துவ உபகரணங்கள், முதலுதவி சிகிச்சை அளிக்க 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆய்வில் ஆரணி காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், படவேடு அருள்மிகு ரேணுகாம்பாள் கோயில் செயல் அலுவலர் சங்கர், போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி லட்சுமி, கண்ணமங்கலம் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி போளூா் மண்டல துணை வட்டாட்சியா் சிவலிங்கம் வருவாய் ஆய்வாளர் சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர் ஜோதிமுருகன், உள்பட பிற துறை அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனர்.

Tags

Next Story