கடன் தொல்லை காரணமாக போளுர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை

கடன் தொல்லை காரணமாக போளுர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை
போளூர் அருகே கடன் தொல்லை தாங்க முடியாமல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

போளூர் அடுத்த மட்டப்பிறையூர் கிராமத்தின் அருகே விவசாய கிணற்றில் பெண்சடலம் மிதப்பதாக போளூர் காவல் துறையினருக்கு இன்று தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினரை அழைத்துச் சென்ற காவல் துறையினர், கிணற்றில் மிதந்த சடலத்தை மீட்டனர். அதே கிணற்றில் வேறு சடலங்கள் இருக்கிறதா என தேடியபோது, மேலும் ஒரு சடலம் மீட்கப்பட்டது.

கிணற்றின் அருகே நடத்திய சோதனையில் ஆதார் அட்டையும், கடிதமும் சிக்கின. அதைக் கைப்பற்றி காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட உடல்கள் ஒரே குடும்பத்தினருடையது என தெரியவந்தது.

நல்லவன்பாளையம் அருகே சமுத்திரம் பகுதியை சாந்திராஜ் (50), இவரது மனைவி மீரா(40). இவர்களது மகன் தேவகுமாரா (23). இவர்கள் போளூர் அருகே உள்ள குலதெய்வ கோயிலுக்கு செல்வதாக உறவினர்களிடம் தெரிவித்துவிட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் மீரா, அவரது மகன் தேவகுமாரா ஆகியோரது உடல்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. கிணற்றின் அருகே கிடைத்த கடிதத்தில், கடன் தொல்லை காரணமாக மூவரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதால், சாந்திராஜ் உடலை தற்போது தீயணைப்பு துறையினர் கிணற்றில் தேடி வருகின்றனர்.

இது குறித்து போளூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

Tags

Next Story