செய்யாறு அருகே வீட்டின் சிமெண்டு கூரையை உடைத்து திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா பெரிய கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 60). இவரது மனைவி மகாராணி (58). இவர்களுடைய 2 மகன்கள் இறந்துவிட்ட நிலையில் தற்போது தனியாக வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 15-ந் தேதி இருவரும் வீட்டைப் பூட்டிக் கொண்டு சபரிமலைக்கு சென்றுள்ளனர். இன்று அதிகாலை அந்த வழியாக சென்ற ஊர் மக்கள் வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடப்பதை கண்டு செய்யாறு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று வீட்டை ஆய்வு செய்த போது வீட்டின் பின்பக்கம் உள்ள, சிமெண்டு ஓட்டின் கூரையை உடைத்து உள்ளே இறங்கி, வீட்டின் தாழ்பாள்களை திறந்து வீட்டை ஆராய்ந்து சாவியை எடுத்து பீரோவில் உள்ள பொருட்களை அள்ளிச் சென்றுள்ளனர். மேலும் டி.வி. உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போயிருந்தன.
வீட்டின் பீரோவில் நகை, பணம் எவ்வளவு வைத்திருந்தார்கள் என்பது குறித்து சபரிமலைக்கு சென்றுள்ள நரசிம்மன் வந்த பிறகே முழுமையான விவரம் கிடைக்கும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu