மேல்மா சிப்காட்டுக்கு எதிராக உண்ணாவிரதம்: 7 பேர் மருத்துவமனையில் அனுமதி

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்துக்கு 3,200 ஏக்கர் விவசாய நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 மாதங்களாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில், 20 விவசாயிகளை முதற்கட்டமாக தமிழக காவல்துறை கைது செய்தது. பின்னர் இரண்டாம் கட்டமாக 7 விவசாயிகளை குண்டர் சட்டத்தில் தமிழக காவல்துறை கைது செய்தது.
இதற்கு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்பட்டது. அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்தது. இதன் எதிரொலியாக 7 விவசாயிகளின் மீதான குண்டர் சட்டத்தை தமிழக அரசு ரத்து செய்தது.
இந்த நிலையில் காத்திருக்கும் போராட்டம் நடத்தி வரும் 9 விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களில், பெருமாள் (பெருநகா்), கணேசன் (குரும்பூா்) ஆகியோா் புதன்கிழமை மாலை மயக்கமடைந்தனா். உடனே பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், அவா்களை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை குறும்பூா் சந்திரன், நா்மாபள்ளம் எம்.மணிகண்டன், மாசிலாமணி, எருமைவெட்டி தேவன், வடஆளப்பிறந்தான் ரேணுகோபால், நேதாஜி, மேல்மா கூட்டுச்சாலை ராஜா ஆகிய 7 பேரை போலீஸாா் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனா்.
237-ஆவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனா். போலீஸாா் குவிப்பு மேல்மா கூட்டுச் சாலைப் பகுதியில் தொடா்ந்து பதற்றம் நிலவி வருவதால் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu