டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி: கைதான சிறுவன் தற்கொலை முயற்சி

டாஸ்மாக் கடை (பைல் படம்).
செங்கம் அருகே நள்ளிரவில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சிறுவனை போலீசார் கைது செய்தனர். கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மற்றொரு சிறுவன் போலீஸ் நிலையத்தில் உடலை பிளேடால் கிழித்துக்கொண்டதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்
செங்கம் அருகே உள்ள பெருமுட்டம் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு வேலை நேரம் முடிந்ததும் ஊழியர்கள் டாஸ்மாக் கடையை வழக்கம் போல பூட்டி விட்டு சென்றனர்.
இதனை நோட்டமிட்ட மேல்புழுதியூர் பகுதியை சேர்ந்த 3 பேர் அங்கு கொள்ளையடிப்பதற்காக கடப்பாரை உள்பட பொருட்களைக் கொண்டு டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் தூரத்தில் வருவதை பார்த்ததும் டாஸ்மாக் கடைக்குள் 3 பேரும் பதுங்கிக்கொண்டனர்.
டாஸ்மாக் கடை அருகே போலீசார் சென்றபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உடனே போலீசார் வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் சென்றனர். அப்போது திடீரென கடையின் உள்ளே இருந்து 3 பேரும் தப்பி ஓடினர்.
அவர்களில் 17 வயது சிறுவனை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவனுடன் 18 வயதுடைய மேலும் 2 பேர் சேர்ந்து டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பிடிபட்ட சிறுவனை போலீஸ் நிலையத்துக்கு போலீசார் கொண்டு சென்று விசாரணை நடத்திக்கொண்டிருந்தனர்.
அப்போது கொள்ளை முயற்சியில் அவனுடன் ஈடுபட்ட ஒரு சிறுவன் அங்கு வந்து பிடிபட்ட சிறுவனை விடுவிக்கும்படி கூறி வாயில் வைத்திருந்த பிளேடை எடுத்து கழுத்து, நெஞ்சு பகுதிகளில் கிழித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவனை போலீசார் தடுத்து சுற்றிவளைத்து பிடித்து செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் மருத்துவமனையில் இருந்து மீண்டும் போலீஸ் நிலையத்துக்கு வந்த அவன், சிறுவனை விட்டுவிடும்படி கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளான்.
இதைத் தொடர்ந்து மீண்டும் போலீசார் அவனை பிடித்து சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக 17 மற்றும் 18 வயதுடைய 2 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர். பிளேடால் கிழித்துக்கொண்டதால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் சிறுவன் தப்பிச்செல்வதை தடுக்க அங்கு போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒரு சிறுவன் தலைமறைவாகி விட்டான். அவனை போலீசார் தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu