செங்கம் அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டம்

செங்கம் அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டம்
X

காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். 

செங்கம் அருகே ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செங்கம் அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள குப்பநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்திரா நகர் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என குடியிருப்புவாசிகள் புகார் கூறி வந்தனர்.

இந்த நிலையில் குடிநீர் வினியோகம் செய்யாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் செங்கம்- கிளையூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் அந்த வழியாக வந்த பேருந்துகளையும் சிறை பிடித்தனர். தகவல் அறிந்த செங்கம் போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பக்கிரிபாளையம் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற கல்லூரி மாணவி சைக்கிளில் பக்கிரிபாளையம் கூட்ரோடு பகுதியில் நேற்று இரவு சாலையை கடக்க முயன்ற போது பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற கார் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கல்லூரி மாணவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பகுதியில் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுரம் மின் விளக்குகள் எரியாததால் போதுமான வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்பட்டது.

இந்த நிலையில் பக்கிரிபாளையம் கூட்ரோடு பகுதியில் தொடர் விபத்துகள் நடந்து வருவதாகவும் வேகத்தடை அமைக்க வேண்டும் என கூறி அப்பகுதி மக்கள் திருவண்ணாமலை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்

தகவலறிந்த செங்கம் டி.எஸ்.பி. தேன்மொழி மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடி யாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறினர்.

இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து நீண்ட வரிசையில் காத்து நின்றன.

இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags

Next Story