திருத்தணி அருகே பெண்ணை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த இளைஞர் கைது

கைது செய்யப்பட்ட இளங்கோ.
திருத்தணி அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து விட்டு ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 24 வயதுடைய பெண் தனது தந்தையுடன் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள கல்லூரிக்கு ரயில் மூலம் சென்று வரும்போது, திருத்தணி அடுத்த குடிகுண்டா கிராமத்தைச் சேர்ந்த நாகரத்தினம் மகன் இளங்கோ (வயது 30) என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர் அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் அந்த பெண்ணிடம் கோவிலில் திருமணம் செய்து கொள்வதாக சத்தியம் செய்துவிட்டு இளங்கோ பல முறை உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இருவரும் நெருக்கமாக இருந்ததை தனது செல்போனில் புகைப்படம் எடுத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் இளங்கோவிற்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து இளங்கோ மற்றும் அவரது பெற்றோர்களிடம் இளம்பெண் மற்றும் அவரது தந்தை கேட்டதற்கு ஆடி மாதம் முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்வதாக இளங்கோ குடும்பத்தினர் உறுதியளித்துள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக இளங்கோவிற்கு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண்ணுடன் அவரது பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தன்னுடன் உல்லாசமாக இருந்து ஏமாற்றிய இளங்கோ மற்றும் அவரது உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சப் இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி இளங்கோவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார். மேலும் தலைமறைவாக உள்ள இளங்கோவின் தந்தை நாகரத்தினம், பெரியப்பாக்கள் சக்கரபாணி, கிருஷ்ணமூர்த்தி, சித்தப்பா சஞ்சீவி ஜெயராம் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu