கெங்கையம்மன் கோவிலில் விடிய விடிய நடைபெற்ற ஜாத்திரை திருவிழா
![கெங்கையம்மன் கோவிலில் விடிய விடிய நடைபெற்ற ஜாத்திரை திருவிழா கெங்கையம்மன் கோவிலில் விடிய விடிய நடைபெற்ற ஜாத்திரை திருவிழா](https://www.nativenews.in/h-upload/2024/05/30/1909534-img-20240530-wa0011.webp)
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த ஏலியம்பேடு கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிம்மவாஹினி கெங்கையம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் வைகாசி மாத ஜாத்திரை திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டலுடனும் பால்குட ஊர்வலத்துடனும் கோலாகலத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.தினந்தோறும் கெங்கையம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களால் வீதிவுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான ஜாத்திரை திருவிழா இன்று நடைபெற்றது.நள்ளிரவு 12.மணியளவில் மலரலங்காரத்தில் ஜொலித்தபடி பக்தர்கள் புடைசூழ கெங்கையம்மன் சிம்ம வாகனத்தில் ஊர் மத்தியில் உள்ள திடலுக்கு வந்தடைந்தார்.அங்கு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மேளதாளம் முழங்க சாமியாடிகள் மற்றும் கரகம் ஏந்தியவர்கள் முன்னே செல்ல நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனை தோளில் சுமந்தபடி முக்கிய வீதிகளில் ஒய்யாரமாக உலா வந்தனர்.
விழாவின் நிறைவாக சிம்மவாஹினி கெங்கையம்மனுக்கு விதவிதமான காய்கறிகளுடன் படையலிடப்பட்டது.வெகுவிமரிசையாக நடைபெற்ற இவ்விழாவில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu