Siruvapuri Murugan Temple Sasti Vizha சிறுவாபுரி கோவிலில் முருகன் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

கந்த சஷ்டி நிறைவையொட்டி சிறுவாபுரியில் முருகனுக்கு திருக்கல்யாணம் நடந்தது.
Siruvapuri Murugan Temple Sasti Vizha
பொன்னேரி அருகே சிறுவாபுரி பாலசுப்ரமணியர் திருக்கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி முருகன் வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்ரமணியர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கடந்த ஆகஸ்ட் மாதம் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது கும்பாபிஷேகத்தில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட ஏராளமான பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் இக்கோவிலில் ஆறு செவ்வாய்க்கிழமை நாட்களில் நெய் தீபமேற்றி வழிபாடு நடத்தினால் கோரிக்கைகள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் இக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஆறுநாட்கள் முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. விழாவின் உச்சகட்டமாக நடைபெறும் சூரசம்ஹார விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிலையில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. பட்டாடையில் அலங்கரிக்கப்பட்ட முருகபெருமானுக்கும் வள்ளி தெய்வானைக்கும் சாஸ்திர சம்பிரதாயப்படி சீர்வரிசை பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் ஓத, மேளதாளம் முழங்க சிவாச்சாரியார்கள் முன்னிலையில் வள்ளி தேவிக்கும் தெய்வானை தேவிக்கும் ஆகம முறைப்படி மங்கலநாண் சூட்டப்பட்டது. அடுத்து மாலை மாற்றும் வைபவம் நடந்தேறியது. திருக்கல்யாணத்தின் நிறைவாக முருகப்பெருமானுக்கு மஹாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஆலயத்திற்கு வந்திருந்த ஏராளமான பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu