மீஞ்சூர் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி சாலை மறியல் போராட்டம்

மீஞ்சூர் அருகே சாலையை சீரமைக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.
மீஞ்சூர் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் திடீர் போராட்டம் நடத்தினர். தனியார் நிறுவனத்திற்கு செல்லும் கண்டைனர் லாரிகளால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை மோசமடைந்துள்ளதாக குற்றம் சாட்டினார்கள்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த நாலூர் ஊராட்சிக்குட்பட்ட கம்மவார்பாளையம் கிராமத்தில் 100.க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். பொன்னேரி - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் இருந்து கம்மவார்பாளையம் கிராமத்திற்கு செல்லும் குறுக்கு சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கிராமத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்திற்கு நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட கண்டைனர் லாரிகள் வந்து செல்வதாகவும், அதன் காரணமாக சாலை மிகவும் மோசமடைந்துள்ளதாக குற்றம் சாட்டினர். குண்டும், குழியுமான சாலைகளில் பயணிக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாக தெரிவித்தனர்.
தற்போதைய மழைக்கு சாலைகளில் குளம் போல தண்ணீர் தேங்கி நிற்பதாகவும், சேறும், சகதியுமான சாலைகளில் மாணவர்கள், அலுவலகம் செல்வோர் என அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமத்துடன் செல்வதாக வேதனை தெரிவித்தனர். ஊராட்சி நிர்வாகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் என பலரிடம் முறையிட்டும் 10.ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படாமல் கிடப்பதாக குற்றம் சாட்டி லாரிகளை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அதிகாரிகளிடம் பேசி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்தப் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகவே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu