அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடையவரை கைது செய்ய சாலை மறியல்..!

அதிமுக பிரமுகர்  கொலை வழக்கில்  தொடர்புடையவரை கைது செய்ய  சாலை மறியல்..!

கோப்பு படம் 

பொன்னேரி அருகே அதிமுக புறமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

பொன்னேரி அருகே ஊராட்சி மன்ற துணை தலைவர் கணவரும், அதிமுக பிரமுகரின் கொலை வழக்கில் தொடர்புடைய ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டம். 5மாதங்களாக காவல்துறையினர் மெத்தன போக்குடன் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த விச்சூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் வைதேகியின் கணவரான அதிமுக பிரமுகர் சுமன் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதி விச்சூரில் வயல்வெளியில் பணியை முடித்து திரும்பிய போது கூலிப்படையினரால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த கூலிப்படையினரான சுமன் உட்பட 5பேரை மணலி புதுநகர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலை நடந்த நாள் முதலே சுமன் கொலைக்கு பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகரும், விச்சூர் ஊராட்சி மன்ற தலைவருமான சங்கர் தான் காரணம் என்றும் அவரை கைது செய்ய வேண்டும் என துணை தலைவர் வைதேகி தொடர்ந்து காவல்துறை, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் மனு அளித்து வருகிறார்.

ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்யாத மணலி புதுநகர் காவல்துறையினரை கண்டித்து துணை தலைவர் வைதேகியின் உறவினர்கள் மணலி புதுநகரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமது கணவரை கொலை செய்த ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வைதேகி கண்ணீர் மல்க கதறினார்.

மேலும் இறந்த சுமனின் தாய் சாலையில் அழுது புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சிலர் கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்து மண்ணெண்ணெய் ஊற்றி கொள்ள முயன்ற போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவர்களிடம் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை பிடுங்கி சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய கந்தன் என்பவரை கடந்த மாதம் காவல்துறையினர் கைது செய்தபோது கொலைக்கு முக்கிய காரணம் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் என கந்தன் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும், ஆனால் காவல்துறையினர் சங்கரை கைது செய்யாமல் காலம் தாழ்த்தி மெத்தன போக்குடன் செயல்பட்டு வருவதாக புகார் தெரிவித்தனர்.

மேலும் ஊராட்சியில் மணல் கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து என பல்வேறு மோசடி குறித்து கேள்வி எழுப்பிய சுமனை தீர்த்துக் கட்டிவிட்டேன் என பல முறை ஊராட்சிமன்ற தலைவர் மிரட்டியதாகவும் குற்றம் சாட்டினர். கூலிப்படையினரை வைத்து சுமனை கொலை செய்த ஊராட்சி மன்ற தலைவர் சங்கரை உடனடியாக கைது செய்திட வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக பொன்னேரி - திருவொற்றியூர் சாலையில் சுமார் 30நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story