பொன்னேரி பேருந்து நிலையத்தில் பயணிகள் திடீர் சாலை மறியல் போராட்டம்

பொன்னேரி பேருந்து நிலையத்தில் பயணிகள் மறியல் போராட்டம் நடத்தினார்கள். பழவேற்காட்டிற்கு 2 மணி நேரமாக பேருந்துகள் இயக்கப்படவில்லை எனக்கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இருந்து பழவேற்காட்டிற்கு நாள்தோறும் விவசாயிகள், அலுவலகத்திற்குச் செல்லும் அரசு ஊழியர்கள், பள்ளி மாணவர்கள் என ஆயிரக்கணக்கான பயணிகள் பேருந்தில் பயணித்து வருகின்றனர். இரவு பணி முடித்தும், பள்ளி, கல்லூரி முடிந்தும் மாணவர்கள் என ஏராளமான பயணிகள் பழவேற்காடு செல்வதற்தாக காத்திருந்தனர்.
சுமார் 2மணி நேரத்திற்கும் மேலாக பழவேற்காட்டிற்கு பேருந்து இயக்கப்படாததால் ஆத்திரமடைந்த பயணிகள் பொன்னேரி பேருந்து நிலையம் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த பிரச்சினை தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகளிடம் பேசி உடனடியாக பழவேற்காட்டிற்கு பேருந்து ஏற்பாடு செய்தனர். இதனையடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பயணிகள் கலைந்து சென்றனர் . பேருந்து இயக்கப்படாததை கண்டித்து பயணிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பொன்னேரி பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu