பொன்னேரியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகளால் மக்கள் அவதி

பொன்னேரியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்களால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல். பொதுமக்கள் கடும் அவதி அடைவதால் பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கடந்த 2019ஆம் ஆண்டு பாதாள சாக்கடை திட்ட பணிகள் துவங்கப்பட்டது. 63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவக்கப்பட்ட இத்திட்ட பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர். இந்நிலையில் ஹரிஹரன் கடைவீதி, மீஞ்சூர் செல்லும் சாலை, தச்சூர் சாலை, ஏலியம்பேடு செல்லும் சாலை என நகரின் முக்கிய சாலைகளில் பாதாள சாக்கடை பணிகளுக்காக ஆங்காங்கு பெரிய அளவிலான பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. மேலும் பேருந்து நிலைய சாலையும் மூடப்பட்டதால் பொன்னேரியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாவதும், விபத்துகள் ஏற்படுவதும் அன்றாட நிகழ்வாகி விட்டது. குறிப்பிட்ட நேரத்திற்கு குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
குறிப்பாக அவசர ஊர்திகள், தீயணைப்பு வாகனங்கள், கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ மாணவியர்கள், அரசு அலுவலர்கள் என அனைத்து தரப்பினரும் தினமும் காலை, மாலை, இரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசலால் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே மிகவும் மந்தமாக நடைபெறும் பாதாள சாக்கடை பணிகளை துரிதப்படுத்தி சாலைகளை விரைந்து செப்னிட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் பழைய பேருந்து நிலைய பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அங்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu