பாதாள கங்கையம்மன் கோவில் தீமிதி திருவிழா

பொன்னேரி அருகே ஆண்டார்குப்பம் பாதாள கங்கையம்மன் கோவிலில் தீமிதி திருவிழா. திரளான பக்தர்கள் தீ குண்டம் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி ஆண்டார்குப்பம் கிராமத்தில் மிகவும் பழமைவாய்ந்த பாதாள கங்கையம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் 15.ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டலுடன் துவங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது.
பத்து நாட்களுக்கு விழா கோலாகலமாக நடைபெற்று வந்த நிலையில் தீமிதி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் முன்னதாக அதிகாலை அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட நறுமண வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரத்தில் அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உற்சவருக்கு மாலை சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களாலும் அலங்காரம் செய்து மேளதாளம் முழங்கிட அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்பாள் கம்பீரமாக வீற்றிருக்க கரகம், அக்னிச்சட்டி ஏந்தியவர்கள் அக்னி குண்டம் இறங்கினர்.
இதையடுத்து காப்பு கட்டி விரதமிருந்த 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பயபக்தியுடன் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் ஒருவருக்கு ஒருவர் பின் இறங்கி தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.விழாவின் நிறைவாக அம்மன் வீதிவுலா நடைபெற்றது.
இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம பொது மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu