எண்ணூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

எண்ணூர் துறைமுகத்தில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில் எண்ணூர் துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்ததால் பல மாவட்டங்களில் ஏரி, குளங்கள் நிரம்பின. கர்நாடக மாநிலத்தின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழையினால் அங்குள்ள அணைகள் நிரம்பி தண்ணீர் அதிக அளவில் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக இந்த ஆண்டு மட்டும் மேட்டூர் அணை அதன் 120அடி கொள்ளளவை எட்டி இரண்டு முறை நிரம்பி உள்ளது. தென்மேற்கு பருவமழையை தொடர்ந்து பருவமழையும் தற்போது பல மாவட்டங்களில் பலத்த மழையாக பெய்து வருகிறது.
இந்த நிலையில் அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது வடமேற்காக நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 23ம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்பின்னர் வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 24ம் தேதி (நாளை) காலையில் புயலாக வலுப்பெறக்கூடும், அதன்பின்னர் வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து 25ம் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரையில் டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையில் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் சின்னம் காரணமாக 26ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. எண்ணூர் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புயல் எச்சரிக்கை காரணமாக தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் அதனை கருத்தில் கொண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu