முத்து மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா; பக்தர்கள் பரவசம்

பொன்னேரி அருகே குண்ணமஞ்சேரி முத்து மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா நடைபெற்றது.
பொன்னேரி அருகே குண்ணமஞ்சேரி முத்து மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவில், கிராம மக்கள் வேப்பஞ்சேலை அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த குண்ணமஞ்சேரியில் சுமார் முன்னூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடிமாத ஐந்தாவது வார திருவிழா வெகுவிமரிசையாக கோலாகலமாக நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு பால்,தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து பின்னர் பட்டு உரைகளாலும் வண்ண மலர்களாலும் திரு ஆபரணங்களால் அம்மனை அலங்காரம் செய்து தீப, தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
விழாவின் முதல் நிகழ்வாக கைலாய வாத்தியம் இசைக்க மேளதாளம் முழங்க பக்தர்கள் புடைசூழ கரகம் சுமந்த சாமியாடி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தடைந்தார். இதனை தொடர்ந்து விழாவின் சிறப்பம்சமான வேப்பஞ்சேலை சாற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் வேப்பஞ்சேலை அணிந்து ஆலயத்தை மூன்றுமுறை வலம்வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழாவின் நிறைவாக முத்து மாரியம்மனுக்கு மஹாதீபாராதனை காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்களும் விழா குழுவினரும் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu