மீஞ்சூர் அருகே போலீசுக்கு பயந்து எலக்ட்ரீசியன் விஷம் அருந்தி தற்கொலை

மீஞ்சூர் அருகே நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு காவல்துறையினர் வீட்டிற்கு வந்து அழைத்ததால் அச்சமடைந்த தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த புதுப்பேடு பகுதியில் வசித்து வந்தவர் சங்கர் (38). இவர் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் எலெக்ட்ரிஷியன் மற்றும் பிளம்பிங் வேலைகளை செய்து வந்தார். இவருக்கு சுசித்ரா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். நேற்று இவரது வீட்டிக்கு மணலி புதுநகர் போலீசார் மூவர் வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2009ஆம் ஆண்டு மணலி புதுநகர் காவல் நிலையத்தில் சங்கர் மீது பதியப்பட்ட திருட்டு வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், நீண்ட நாட்களாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் சங்கருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதாகவும், வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கை சீக்கிரம் முடித்து கொள்ளுமாறு காவல்துறையினர் கூறியுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்து சங்கர் காவல்துறையினருடன் செல்ல மறுத்துள்ளார்.
காவல்துறையினர் வந்து அழைத்தால் அச்சமடைந்த சங்கர் திடீரென வீட்டில் இருந்த விஷத்தை அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை உடனடியாக மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சங்கரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டது.
தொடர்ந்து இது தொடர்பாக சங்கரின் மனைவி சுசித்ரா அளித்த புகாரின் பேரில் மீஞ்சூர் காவல்துறையினர் சந்தேக மரணம் பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து சங்கரின் மனைவி சுசித்ரா கூறுகையில் சிறுவனாக இருந்த போது நண்பர்களுடன் இருந்ததால் தமது கணவர் மீதும் மோட்டார் திருடியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், திருட்டு நடைபெறும் போது அவர்களுடன் தமது கணவர் செல்லவில்லை என தெரிவித்தார். காவல்துறையினர் வீட்டிற்கு வந்து நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கு விசாரணையை சந்திக்குமாறு தெரிவித்து தமது கணவரை அழைத்ததாகவும், ஆனால் அவர்களுடன் செல்ல தமது கணவர் மறுத்து விட்டதாக தெரிவித்தார்.
சிறுவனாக இருந்த போது இதே போல காவல்துறையினர் வீட்டிற்கு வந்து வெளியே அழைத்து தமது கணவரை அடித்ததாகவும், தற்போது வந்து வீட்டிற்கு வெளியே வர அழைத்த போதும் அதே போல காவல்துறையினர் தமது குழந்தைகளின் முன் தம்மை அடித்து விடுவார்களோ என அஞ்சி தமது கணவர் அவர்களுடன் செல்ல மறுத்து விட்டதாகவும், தம்முடைய எலக்ட்ரிகல், பிளம்பிங் வேலைக்காக வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக வேதனையுடன் தெரிவித்தார்.
வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறையினர் அழைத்ததால் காவல்துறையினர் முன்னிலையில் தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu