வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

கும்மிடிப்பூண்டி அருகே, டிட்கோ தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
கும்மிடிப்பூண்டி அருகே முப்போகம் விளையக்கூடிய விளைநிலங்களை கையகப்படுத்தி டிட்கோ தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டத்திற்கு உட்பட்ட காரணி கிராமத்தில் டிட்கோ தொழில் பூங்கா அமைப்பதற்கான திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்காக அப்பகுதியில் முப்போகம் விளைய கூடிய விளைநிலங்களை கையகப்படுத்த உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், திடீரென வருவாய் துறையினர் அப்பகுதியில் உள்ள நிலங்களை முன்னறிவிப்பு இன்றி அளவீடு செய்து வருவதாக கூறி அப்பகுதி விவசாயிகள் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று போகம் நெற்பயிர்கள் விளையும் நிலங்கள், கத்திரி, வெண்டைக்காய், முள்ளங்கி, பூ வகைகள் ஆகியவற்றை பயிரிடும் சிறு குறு விவசாயிகளின் நிலத்தையும் கையகப்படுத்தி டிட்கோ தொழில் பூங்கா அமைக்கும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இங்கு, 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் விவசாயத் தொழிலை மட்டுமே உள்ளதாகவும், மேலும் விவசாய கூலி தொழிலாளர்களும் தங்களது விளைநிலங்களை நம்பியே வாழ்ந்து வருவதால் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் எனக் கேட்டு கொண்டனர். தொடர்ந்து சார் ஆட்சியர் ஐஸ்வர்யாவிடம் கோரிக்கை மனு அளித்த விவசாயிகளிடம், உரிய நடவடிக்கை எடுப்பதாக சார் ஆட்சியர் உறுதியளித்ததை தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu