குண்டும் குழியுமான ரோடு: முரசு கொட்டி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

பொன்னேரியில், குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முரசு கொட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேரூராட்சியாக இருந்த பொன்னேரி அண்மையில் நகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. கடந்த 2வருடங்களுக்கு மேலாக பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் மந்த கதியில் நடைபெற்று வருகின்றது. பாதாள சாக்கடை பணிகள் முடிவுற்ற பகுதிகளில் முறையாக சாலைகள் சீரமைக்கப்படாததால் குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
இது குறித்து பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொன்னேரி தேரடி சந்திப்பில் நெடுஞ்சாலை அலுவலகம் எதிரே முரசு கொட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாலையை சீரமைக்குமாறு வலியுறுத்தியும் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் மக்களின் கோரிக்கை காதுகளுக்கு எட்டும் வகையில் முரசு கொட்டி முழக்கங்களை எழுப்பினர். போர்க்கால அடிப்படையில் சாலைகளை சீரமைத்து தர வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் அடுத்தடுத்த போராட்டங்களில் ஈடுபடுவோம் என எச்சரித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu