மீஞ்சூர் அருகே சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து சிஐடியூ கண்டன ஆர்ப்பாட்டம்
மீஞ்சூர் அருகே சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து சிஐடியூ கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
தமிழ்நாட்டில் உள்ள பல சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியில் நள்ளிரவு முதல் 3 ரூபாய் முதல் 14 ரூபாய் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
இதனை கண்டித்து மீஞ்சூர் அருகே சின்னமுல்லைவாயல் - வழுதிகைமேடு சுங்கச்சாவடியில் கட்டண உயர்வை கண்டித்து சிஐடியூ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர். சாலைகளை முழுமையாக சீரமைக்காமல் சுங்கக்கட்டணம் மட்டுமே வசூலித்து வருவதாகவும், காலாவதியான சுங்கச்சாவடிகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
சுங்கக்கட்டண உயர்வு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என குற்றம் சாட்டினர். வாகனங்களை இயக்குவதற்கான செலவு அதிகரிக்கும் நிலையில் வாகன வாடகை அதிகரித்து அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் மக்கள் பாதிக்கும் சூழல் உருவாகும் என தெரிவித்தனர்.
உடனடியாக ஒன்றிய அரசு சுங்கக்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட விசிக செயலாளர் அறம் திரைப்பட இயக்குநர் கோபி நயினார், மீஞ்சூர் பேரூராட்சி கவுன்சிலர் அபூபக்கர் உள்ளிட்டோர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.