பொன்னேரியில் பகவான் விஸ்வகர்மா ஜெயந்திவிழா கொண்டாட்டம்
பொன்னேரியில் பகவான் விஸ்வகர்மா ஜெயந்திவிழா நடந்தது. இதில் பக்தர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பகவான் விஸ்வகர்மாவின் ஜெயந்திவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. அகத்தீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற இவ்விழாவில் விஸ்வகர்மா மலர் அலங்காரத்தில் வீற்றிருக்க சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் ஓதி கலசத்தில் புனிதநீர் ஊற்றி சிறப்பு யாக சாலை பூஜைகளை நடத்தினர்.
முன்னதாக விநாயகப்பெருமானுக்கு பால்,தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது,பன்னீர், திருநீர்,தேன் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு,பட்டு உடைகளாலும், வண்ண மலர்களாலும் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நறுமண திரவியங்களை கொண்டு நடத்தப்பட்ட யாகத்தின் நிறைவில் பூர்ணாஹுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து ஒன்பது வகையான பழவகைகள் மற்றும் அரிசி மாவில் செய்யப்பட்ட தின்பண்டங்கள் படையலிடப்பட்டு பகவான் விஸ்வகர்மாவுக்கு அர்ச்சனை செய்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.விழாவின் நிறைவாக விஸ்வகர்மா சமூகத்தினர் அனைவருக்கும் பூணூல் அணிவிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. விஸ்வகர்மா திட்டத்தை கொண்டுவந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு விழா அமைப்பாளர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பகவான் விஸ்வகர்மாவை வழிபட்டு சென்றனர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu