பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ஆவணங்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆவணங்கள் பதிவு செய்வதற்கு இடைத்தரகர்கள் மூலம், அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக தொடர்ந்து வந்த புகாரைத் தொடர்ந்து திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராமமூர்த்தி தலைமையில் 6 பேர் கொண்ட அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் அலுவலகத்திற்குள் நடமாடிய நபர்களையும், அவர்கள் கொண்டு வந்த உடமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து முப்பது ஆயிரம் பணம், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் லஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக நுழைந்தபோது அப்பகுதியில் உள்ள நகல் எடுக்கும் கடை ஒன்றில் ஆவண எழுத்தர் ஆக பணி புரியும் ஊழியர் ஒருவர் அதிகாரிகளை கண்டு மிரண்டு போய் தான் வைத்திருந்த பணத்தை மதில் சுவர் வழியாக அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வீசினார்.

இதனைக் கண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அந்த பணத்தை கைப்பற்றி சம்பந்தப்பட்ட ஊழியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story