பொன்னேரியில் திமுக ஆட்சியை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

பொன்னேரியில் திமுக ஆட்சியை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
X

பொன்னேரியில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பொன்னேரியில் திமுக ஆட்சியை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ள தமிழ்நாட்டின் ஆட்சி நீடிக்க வேண்டுமா என்பதை மத்திய அரசு எண்ணிப் பார்க்க வேண்டும். 2026 தேர்தலுக்கு முன்னதாக திமுக ஆட்சி கவிழும். அதிமுக அணிகள் ஒன்றிணைய வாய்ப்பில்லை என பொன்னேரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் பேசினார்.

தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வை கண்டித்து இன்று அதிமுக சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் முன்னாள் எம்எல்ஏ சிறுணியம் பலராமன் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மின்கட்டண உயர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்.மின்கட்டண உயர்வு, நியாய விலை கடைகளில் பாமாயில், பருப்பு நிறுத்தம், சட்டம், ஒழுங்கு சீரழிவு குறித்து அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.


தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்மகன் உசேன் சட்டம், ஒழுங்கு சீரழிந்துள்ள தமிழ்நாட்டின் ஆட்சி தேவைதானா, நீடிக்க வேண்டுமா என்பதை மத்திய அரசு எண்ணி பார்க்க வேண்டும் எனவும், அதனை உன்னிப்பாக கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார். 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் திமுக ஆட்சி கவிழும் எனவும் ஆரூடம் தெரிவித்தார். பொதுக்குழுவால் நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கும் எண்ணமில்லை எனவும் அதிமுக அணிகள் ஒன்றிணைய வாய்ப்பே இல்லை என தமிழ்மகன் உசேன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழ்மகன் உசேன் மின்கட்டண உயர்வு குறித்து பேசும் போது சண்டாள பாவிகளே என்ற வார்த்தையை பயன்படுத்தி பேசியதால் அருகில் நின்ற கட்சி நிர்வாகிகள் கலக்கம் அடைந்தனர். தமிழ்நாட்டில் சண்டாளர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்த கூடாது என ஆதிதிராவிடர் நலத்துறை அண்மையில் அறிவுறுத்தியது. அரசியல் மேடைகள் நகைச்சுவையாகவே, பிறரை இழிவுபடுத்தும் விதமாகவோ சண்டாளர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தினால் பட்டியல், பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைத்த நிலையில் அதிமுக அவைத்தலைவர் ஆர்ப்பாட்ட மேடையில் சண்டாள பாவிகளே என்ற வார்த்தையை பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story