ஆடி பௌர்ணமியை முன்னிட்டு பொன்னியம்மனுக்கு 108 பால்குடம் அபிஷேகம்

பொன்னேரி அருகே ஆடி பௌர்ணமியை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆடி பௌர்ணமியை முன்னிட்டு பால் குடம் எடுத்து பக்தர்கள் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர். திருவேங்கடபுரம் பகுதியில் உள்ள பொன்னியம்மன் கோவிலில் ஆடி மாதம் திருவிழாவின் ஒரு பகுதியாக பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவர்.
ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 14ஆம் ஆண்டு பால் குட திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆதி பொன்னியம்மன் மண்டபத்தில் இருந்து ஆலய திருப்பணி குழுவினர், ஆண்கள், பெண்கள் என 108க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் பால் குடங்களை சுமந்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து பொன்னியம்மன் கோவிலை சுற்றி வலம் வந்தும் ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.
பின்னர் அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், தேன், ஜவ்வாது, 108 குங்கும அர்ச்சனை உள்ளிட்ட வாசன திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பட்டு உடைகளாலும், வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களாலும் அம்மனை அலங்காரம் செய்து தீப,தூப ஆராதனைகளும் நடைபெற்றன.
பால்குட திருவிழாவை முன்னிட்டு அங்கு வந்திருந்த திரளான பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu